ADDED : ஜன 27, 2017 12:05 PM

1959 ஏப்ரல் மாத பிற்பகுதியில் காஞ்சிப்பெரியவர் சென்னை அருகிலுள்ள வானகரத்தில் தங்கியிருந்தார். அங்கு பெரியவரின் சீடரான சந்திரமவுலி ஸ்ரௌதிகள் உடனிருந்த போது நடந்த சம்பவம் இது.
அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர், பெரியவரைக் காண வந்திருந்தார். அவர் பெரியவரிடம், ''சுவாமி! எனது மந்திரி சபையிலுள்ள அறநிலையத்துறை அமைச்சர் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்ற போது, அர்ச்சகர் பன்னீர் இலையில் விபூதியை வைத்து அவரிடம் தூக்கிப் போட்டிருக்கிறார். அது அவருக்கு அவமானமாக இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்,'' என்றார்.
அதற்குப் பெரியவர், “நீங்கள் இதில் வருத்தப்பட ஏதுமில்லை. அப்படி அவர் தூக்கிப் போட்டதற்கு காரணம் இருக்கிறது. ஆதிசங்கரருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. அவர் திருச்செந்தூர் சென்று முருகன் கோவிலுக்குச் சென்று, சுப்ரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டார். அதில், 'தாரகாசுரனை வதம் செய்த முருகப்பெருமானே! உன் அபிஷேக விபூதியை இலையில் வைத்து போடுவதைக் கண்ட மாத்திரத்தில் பூத, பிரேத, பிசாசுகள் அனைத்தும் ஓடி போய்விடும்,” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் திருச்செந்தூரில் பன்னீர் இலையில் விபூதியைக் கையில் கொடுக்காமல், பக்தர்களின் கையில் தூக்கிப் போடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே இதில் அவமானப்படுத்தும் நோக்கம் சிறிதும் கிடையாது. தொன்று தொட்டு இந்த நடைமுறை அங்கு பின்பற்றப்படுகிறது,” என்று விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை அறநிலையத்துறை அமைச்சரிடம் காமராஜர் தெரிவித்தார். அதன் பின் அறநிலையத்துறை அமைச்சரும் காஞ்சிப்பெரியவரை நேரில் சந்தித்து, தவறுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, ஆசியும் பெற்றுச் சென்றார்.
சி.வெங்கடேஸ்வரன்