
பண்ணையார் ஒருவரிடம் முத்து என்ற படிப்பறிவு இல்லாத இளைஞன் வேலை செய்தான்.
நெல்லும், கரும்பும் விவசாயம் செய்து வந்த பண்ணையார் வேறு ஏதாவது புதிதாகப் பயிரிடலாம் என்று முத்துவிடம் யோசனை கேட்டார்.
''எஜமான்....நீங்க விரும்பினா இந்த வருஷம் வாழை மரத்தைப் பயிரிடலாம்'' என்றான் மாரிமுத்து.
பண்ணையாரும், ''உன் மனசு போல வாழையே நடலாம்'' என்றார்.
''கேணியில வேண்டிய அளவு தண்ணி கிடக்கு. வயல் முழுக்க செவ்வாழை நடுவோம். நல்ல லாபத்துக்குப் போகும்''என்றான்.
''அதுவும் சரி தானப்பா''என்றார் பண்ணையார்.
வாழைக்கன்று நட்டதில் இருந்து தோட்டமே கதி என்று காவல் கிடந்தான் முத்து.
வாழைக்கன்றுகள் குருத்து விட்டு இலை பரப்பி பச்சைப்பசேலென வளர ஆரம்பித்தன. அதைக் கண்ட முத்து மகிழ்ந்தான்.
வாழைத்தோப்பில் முதன் முதலில் ஒரு மரம் குலை தள்ளியது.
வயலுக்கு வந்த பண்ணையார், ''முத்து... வாழையெல்லாம் எப்படி இருக்கு?''என்று கேட்டார்.
''பலன் கொடுக்கிற காலம் வந்தாச்சு எஜமான். இதோ நீங்களே மரத்தைப் பாருங்க.” என்றான் முத்து.
பண்ணையாரும் மனதிற்குள், 'ஆகா.... நல்ல ஆதாயம் கிடைக்கும் போலிருக்கே' என்ற சந்தோஷத்துடன் வீட்டுக்கு கிளம்பினார்.
வீட்டில், குலதெய்வமான காளியம்மன் கோயிலில் இருந்து திருவிழா அழைப்பிதழ் வந்திருந்தது. பவுர்ணமியன்று அம்மனுக்கு பூஜை நடக்க இருப்பதை அறிந்தார்.
பண்ணையார் காணிக்கை செலுத்த விரும்பினார். உடனே முத்துவை கூப்பிட்டு, ''மொதல்ல வர்ற வாழைத்தாரை வெட்டி பழுக்க வைச்சிடு. அதை நீயே நேரில போய் அம்மன் கோயில குடுத்துடு''என்றார்.
முத்துவும் வாழைத்தாரை வெட்டிப் பழுக்க வைத்தான். அதில் 108 வாழைப் பழங்கள் இருந்தன.
தலைச்சுமையாக எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
நீண்ட துாரம் வெயிலில் நடந்ததால், அவனுக்கு பசி உண்டானது. பொறுக்க முடியாமல், சில பழங்களைத் தின்று பசியாறினான்.
கோயிலுக்குச் சென்றவன், 'ஆத்தா... உன்னருளால எல்லோரும் நல்லா இருக்கணும்''என்று வேண்டிக்கொண்டு கோயில் பொறுப்பாளரிடம் வாழைத்தாரை ஒப்படைத்தான். கருவறையில் அம்மன் முன் பாதகாணிக்கையாக பழத்தார் வைக்கப்பட்டது.
பொறுப்பாளர் முத்துவிடம் ரசீது எழுதிக் கொடுத்தார். அதில், ''பண்ணையார் அவர்களுக்கு... தாங்கள் அனுப்பியதில் 10 பழம் தவிர மீதிப்பழங்கள் அம்மனுக்கு வந்து சேர்ந்தது''என்று இருந்தது.
படிக்கத் தெரியாத முத்துவும் ஏதும் புரியாமல் பண்ணையாரிடம் ரசீதை ஒப்படைத்தான். அதைப் படித்த பண்ணையாருக்கு கோபம் எழுந்தது.
'அம்மனுக்கு கொடுத்த பழத்தை திருடியது இந்த கை தானே'' என்று சொல்லி முத்துவின் கையில் சூடு போட்டார்.
வலி தாளாமல் துடித்தான்.
அன்றிரவே பண்ணையாரின் கனவில் தோன்றி,'' நீ அனுப்பியதில் 10 பழத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டேன்.'' என்றாள் காளி கோபத்துடன்.
விழித்தெழுந்த பண்ணையார் திடுக்கிட்டார்.
தவறை உணர்ந்தவராக,'' முத்து... நீ சாப்பிட்ட பழங்களை அம்மன் விருப்பமா ஏத்துக்கிட்டா. உழைப்பின் பலனை அனுபவிக்க முதல் உரிமை உனக்கே. உன்னை தண்டித்த என்னை மன்னித்துவிடு'' என்றார் பண்ணையார்.