ADDED : செப் 19, 2023 12:30 PM

உண்மையான பக்தருக்கு தெய்வமே மனித உருவில் வந்து தொண்டு செய்யும் என்பது வேதவாக்கு. திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையிலுள்ள தலங்களில் மணிமூர்த்தீஸ்வரர் கோயில் சிறப்பு மிக்கது. இங்கு விநாயகரே மூலவராக அருள்புரிகிறார்.
இந்த ஊரில் அனவரதம் என்னும் ஸ்தபதி வாழ்ந்தார். விநாயக பக்தரான இவர் கோயிலுக்கு தினமும் விநாயகரை தரிசிக்கச் செல்வார். பின்னர் வீட்டில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்ட பிறகே அன்றாடப் பணிகளைத் தொடங்குவார். விநாயகரின் திருநாமத்தையே எப்போதும் ஜபித்துக் கொண்டே இருப்பார். அனவரதத்தின் பணியாளரின் பெயர் விநாயகம்.
வெளியே செல்லும் போதெல்லாம் விநாயகம் குடை பிடித்து செல்வார். ஒரு சதுர்த்தியன்று விநாயகம் அவசரப்பணியில் இருந்ததால் அவரிடம் சொல்லாமலேயே மணிமூர்த்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார் அனவரதம். அப்போது திடீரென மழை பெய்தது. தரிசனத்தை முடித்ததும் விநாயகம் அருகில் இருப்பதாக எண்ணி, 'விநாயகம் குடையைப்பிடி' என சொல்லி நடக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் விநாயகம் வடிவில் மணிமூர்த்தீஸ்வரர் தோன்றி குடை பிடித்து வந்தார். மழை பெய்ததைக் கண்ட விநாயகம் முதலாளியை அழைத்து வர குடையுடன் வந்த போது, தன்னை போல ஒருவர் முதலாளியுடன் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். வாசலில் உண்மையான பணியாளர் குடையுடன் நிற்பதைக் கண்டு அனவரதமும் திகைத்தார். மணிமுர்த்தீஸ்வரர் அங்கிருந்து மறைந்த போது தான் உண்மை விளங்கியது. தனக்கு குடை பிடித்தது விநாயகரே என்பதை அறிந்து கோயில் இருக்கும் திசை நோக்கி வணங்கினார்.
தினமும் அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபடுபவர்களுக்கு முன்னவனான விநாயகரே முன்நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. என்ன அருகம்புல் சாற்ற ரெடியாகி விட்டீர்களா...