
மந்த்ராலய மகான் என்றும், கண்கண்ட தெய்வமென்றும் கொண்டாடப்படும் ராகவேந்திரர், ஜீவசமாதியில் இருந்து அருள்புரிந்து வருகிறார்.
திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தம்பதியருக்கு பிறந்த இவரது நிஜப்பெயர் வேங்கடநாதன். சிறு வயதிலிருந்தே அபார அறிவு பெற்றிருந்த வேங்கடநாதனுக்கு, கும்பகோணம் மத்வ மடத்தின் அதிபதியாக விளங்கிய சுதீந்திரரிடம் ஈடுபாடு இருந்தது. அவருடைய உதவியால் வேதங்கள் உட்பட பற்பல சாஸ்திரங்களையும் திறம்படக் கற்றார். பிரம்ம சூத்ர பாடத்தை நடத்திய போது ஒரு சொல்லுக்குப் பொருள் கிடைக்காமல் தவித்தார் சுதீந்திரர். பாடத்தை நிறுத்திவிட்டு, வேங்கடநாதன் எங்கே என்று தேடினால் அந்த இரவில் நடுங்கும் குளிரில் தரையில் படுத்துக் கிடந்தார். அவரருகே சில ஓலைச்சுவடிகள் இருந்தன. அவற்றைப் படித்துப் பார்த்த குருநாதர், அதில் தான் தேடிய விளக்கம் இருப்பது கண்டு அதிசயித்தார். தன்னுடைய காவி உடையால் சீடனுக்கு போர்த்தி விட்டார். காலையில் குரு வந்திருந்த போது உறங்கிவிட்டோமே என்று பதைத்த அவரை சமாதானப்படுத்தி அவருடைய விளக்கவுரையை மெச்சி அவருக்கு 'பரிமளாச்சார்யர்' என்னும் விருதை அளித்தார்.
சரஸ்வதிபாயை மணந்து லட்சுமி நாராயணன் என்னும் மகனைப் பெற்றார். தான் பிருந்தாவனப் பிரவேசம் அதாவது சமாதி கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை உணர்ந்த சுதீந்திரர், வேங்கடநாதனைப் பீடாதிபதியாக்க எண்ணி தன் விருப்பத்தைத் தெரிவித்தார். இல்லறத்தில் இருக்கும் தான் அதை ஏற்பதற்கில்லை என்று பணிவுடன் தெரிவித்தார் சீடர். அவருடைய மனைவியும், கணவர் தன்னைவிட்டு விட்டுச் சென்று விடுவாரோ என்று வருந்தினார்.
இந்தநிலையில், வேங்கடநாதனுக்குக் கலைமகள் காட்சி அளித்தாள்! 'குருநாதரின் விருப்பத்தை நிறைவேற்றுக! நான் உனக்குத் துணையிருப்பேன்!” என்றாள். மறுநாளே குருவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
வேங்கடநாதனுக்குத் துறவறம் அளித்த துறவி அவருக்கு “ராகவேந்திர தீர்த்தர்” என்று பெயர் சூட்டினார். இதைக் கேள்விப்பட்ட சரஸ்வதிபாய் , கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பேயாய்த் திரிந்து தன்னிடம் முறையிட்ட அவளுக்கு அருள்புரிந்து நற்கதி வழங்கினார் ராகவேந்திரர். சுதீந்திரர் தான் நிச்சயித்தபடி, துங்கபத்ராநதிக் கரையிலுள்ள நவ பிருந்தாவன் என்னும் இடத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்.
தொடர்ந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டார் ராகவேந்திரர். பல அதிசயச் செயல்களை நிகழ்த்தினார்.
''நீண்ட நாள் வாழ்வாய்!” என்று தான் ஆசீர்வதித்த ஒரு மணமகன் தடுக்கி விழுந்து இறந்து விட்டான். அவனை நீர் தெளித்து உயிர்ப்பித்தார். பஞ்சம் ஏற்பட்ட போது அரண்மனை தானியக் கிடங்கிலிருந்து மக்களுக்குக் வழங்க தானியங்கள் பெருகச் செய்தார்.
தன்னைச் சோதிக்க வந்த மூன்று வேதியர்களை தனது தீர்க்கதரிசனத்தால் திருப்தி செய்து, தன்னுடைய பிருந்தாவனத்திற்கு அவர்களும், அவருடைய பரம்பரையினரும் தொண்டு செய்யுமாறு ஏற்பாடு செய்தார்.அது இன்றும் தொடர்கிறது.
தன்னுடைய வாரிசாக தனது பூர்வாசிரம அண்ணனின் பேரனான வெங்கண்ணாவை நியமித்து அவருக்கு, யோகீந்திர தீர்த்தர் என்னும் துறவு நாமம் சூட்டினார்.
தனது பிருந்தாவனப் பிரவேசத்தை (சமாதியடைதல்) துன்பமான நிகழ்ச்சியாகக் கருதக் கூடாது. எல்லோரும் நாம சங்கீர்த்தனம் செய்து, விருந்துண்டு வீடு செல்ல வேண்டும் என்பது அவருடைய ஆசை. அவரது கட்டளையின்படி, கையிலிருந்த துளசிமாலை கீழே விழுந்தவுடன், மேற்கல்லால் பிருந்தாவனம் மூடப்பட்டது.
மாஞ்சாலி கிராமம் மந்த்ராலயம் என்னும் ஒப்பற்ற திருத்தலமானது! அந்த நிலத்தை அரசுடைமையாக்க வந்த தாமஸ் மன்றோவுடன், சமாதியிலிருந்து எழுந்து பேசி அவருக்கு அட்சதை அளித்து கவர்னராக்கினார்!
பக்தர்கள் அவருடைய அருளை அன்றாடம் அனுபவித்து வருகிறார்கள். இதுதான் அவர் நடத்திக்கொண்டிருக்கும் நித்திய அதிசயம்!