sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சை புடவைக்காரி (5)

/

பச்சை புடவைக்காரி (5)

பச்சை புடவைக்காரி (5)

பச்சை புடவைக்காரி (5)


ADDED : மே 25, 2018 04:32 PM

Google News

ADDED : மே 25, 2018 04:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாம் வெறுத்துவிட்டது

என் நெருங்கிய நண்பருக்குத் தொழிலில் பெரிய நெருக்கடி. குடும்பத்திலும் பிரச்னைகள்.

''எல்லாம் வெறுத்துவிட்டது. மனைவி, மகன், ஊழியர்கள் தொழில் கூட்டாளிகள் என்று யாருமே சரியில்லை. எல்லாவற்றையும் துறந்துவிடலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன்'' என்று புலம்பினார் நண்பர்.

'உன்னை நம்பிக்கொண்டிருக்கும் உன் குடும்பம், உன் கூட்டாளிகள், உன் ஊழியர்களின் கதி?' என்று கேட்க நினைத்தேன், ஆனால் மனம் வரவில்லை.

இதே யோசனையுடன் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்தேன். ஒரு வயதான பெண் என்னை நோக்கி வந்து வந்தாள்.

'அருகில் உட்காரலாமா?'

''தாராளமாக.''

''நண்பர் துறவியாகப் போகிறார் என்று கவலைப்படுகிறாயோ?''

''தாயே! நீங்களா...?'' பச்சைப்புடவைக்காரி. எங்கள் மதுரையின் மகாராணி, அன்னை மீனாட்சி.

''இது என்ன கோலம் தாயே?''

''என் கோலத்தை விடு, அந்தக் காட்சியைப் பார்''

அது ஒரு துறவியின் ஆஸ்ரமம். அந்தி சாயும் நேரம். கோட்டும் சூட்டும் அணிந்த ஒருவர் கண்ணீரும் கம்பலையுமாக ஓடி வந்தார். அந்த ஆஸ்ரமத்தின் தலைவர் போல் இருந்த துறவியின் காலில் விழுந்தார்.

“சாமி, வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன். எனக்கு உடனே காவி ஆடைகளைக் கொடுத்துத் துறவியாக்குங்கள்..”

துறவி ஒரு சீடனை நோக்கி, ''அனந்தா இவருக்குக் காவியாடை கொண்டுவா. சந்நியாச ஹோமத்திற்கு ஏற்பாடு செய்''

இவ்வளவு சீக்கிரம் தான் கேட்ட துறவறம் கிடைக்கும் என்று, கோட்டு சூட் போட்ட மனிதர் நினைக்கவேயில்லை. அதுவும் புகழ்பெற்ற துறவியிடம்.

''காவி ஆடைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் உங்களிடம் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து என் முன்னால் வையுங்கள்'' கனிவுடன் சொன்னார் துறவி.

கோட்-சூட் மனிதர் கீழ்ப்படிந்தார்.

முதலில் தன் கையில் இருந்த விலை மதிப்புள்ள ஐ - போனையும் ஐ - பேடையும் வைத்தார். முந்தைய வருடம் அந்த மனிதர் வெளிநாடு சென்ற போது வாங்கிய மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தைக் கழற்றி வைத்தார். அடுத்து தான் ஓட்டி வந்த பென்ஸ் காரின் சாவியை வைத்தார். அதன்பின் தன் பர்சை வைத்தார். அதுவும் அவரைப் போலவே கொழுத்திருந்தது. பின் தன்னிடம் உள்ள கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்களை வைத்தார்.

''அனந்தா... ஹோம அக்னியை மூட்டு. இந்தப் பொருட்களை எல்லாம் அதில் போட்டு எரித்துவிடலாம்.''

கோட்-சூட் மனிதர் சன்னமாக அதிர்ந்தார்.

''சாமி இதெல்லாம் விலை மதிப்புள்ள பொருட்கள் சாமி. இதை வீணாக்க வேண்டாமே.''

''அப்படியா? சரி, இதையெல்லாம் ஆசிரமத்தின் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களிடம் கொடுத்து விடுவோம்.''

''அது வந்து...''

''என்னப்பா வந்து, போய்.. ''

''என் மகனுக்கு என் கார் பிடிக்கும். காரை அவனிடம் கொடுத்து விடுகிறேன். என் போன்களை என் மகளுக்குக் கொடுத்து விடுகிறேன். வங்கிக் கணக்கு விபரங்களையும், இந்தக் கார்டுகளையும் என் மனைவியிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதற்குப் பின்...''

''எல்லாவற்றையும் வெறுத்து விட்டேன் என்று சொன்னாய்! இந்தப் பொருட்களின் மேல் உள்ள பற்று இன்னும் போகவில்லையே. நீ வெறுப்பது மனிதர்களைத்தான் இந்த ஜடப்பொருட்களை அல்ல.''

அந்த மனிதர் தலை குனிந்தார்.

''உனக்கு நான் வைத்த முதல் சோதனையில் தோற்றுவிட்டாய். இன்னொரு சோதனை வைக்கிறேன். அதில் வெற்றி பெற்றால் நீ சந்நியாசியாகிவிடலாம்.''

ஆவலுடன் நிமிர்ந்து பார்த்தார் கோட்-சூட் மனிதர்.

''யாரையாவது நேசிக்கிறாயா?''

கோட்-சூட்டின் முகம் பிரகாசித்தது.

''நேசத்தையே துறந்துவிட்டேன், சாமி. என் மனைவி, என் மகன், என் மகள் தொழிலில் என்னுடன் இருக்கும் என் கூட்டாளிகள், நட்பு,உறவு என்று யார் மேலும் நேசம் இல்லை சாமி. எல்லாப் பற்றுதலையும் விட்டுவிட்டேன். எனக்கு யார் மேலும் நேசம் கிடையாது.''

''எந்த மனிதன் மேலும் நேசம் கிடையாது. ஆனால் இந்த ஜடப்பொருட்கள் மீது இன்னும் ஆசை இருக்கிறது..''

'......... '

'முட்டாளே எதற்காகவும் நேசத்தைத் துறப்பது துறவறம் இல்லை. நேசத்திற்காக மற்ற அனைத்தையும் துறப்பது தான் உண்மையான துறவறம். உன் மனதில் உள்ள நேசம் குறையும் போது நீ துறவியாக முடியாது. ஏன் நீ மனிதனாகக் கூட இருக்க முடியாது. உன் மனதில் உள்ள நேசம் பெரிதாக வளர்ந்து கொண்டே போய் ஒரு நிலையில் அதை உன்னைச் சேர்ந்தவர்களையும் தாண்டி உலக அளவிற்கு விரியும் போதுதான் நீ உண்மையான துறவியாவாய். பெண்களை உன் தாயாகவும் இது போன்ற ஜடப்பொருட்களை வெறும் மண்ணாகவும் பார்க்கும்போதுதான் நீ துறவியாக முடியும். எல்லா உயிர்களிலும் உன்னைப் பார்க்கப் பழகிக்கொள்ளும் போதுதான் துறவறம் முழுமையடைகிறது. போ உன் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்று நண்பர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்''

''துறவறம் என்றால் என்னவென்று புரிந்ததா?''உமையவள் கேட்டாள்.

''புரிந்தது தாயே. நண்பரிடம் சொல்லிப் பார்க்கிறேன்.''

அவள் திருப்பாத கமலங்களில் பலமுறை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்து பார்த்த போது அவள் அங்கு இல்லை.

இன்னும் வருவாள்

தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரங்கசாமி






      Dinamalar
      Follow us