தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/உன்னை அறிந்தால்... (15)

உன்னை அறிந்தால்... (15)

உன்னை அறிந்தால்... (15)


ADDED : மார் 01, 2019 02:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2019 02:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்பிக்கையே நம் கை

திருமணத்திற்கு முன் பெண் பார்க்கச் செல்லும் மாப்பிள்ளை சில நிமிடங்கள் தான் பெண்ணை பார்ப்பார். மனதிற்கு பிடித்தால் திருமணம் நடக்கும். காரணம் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை.

விஞ்ஞானிகள் ஏவுகணையை விண்வெளியில் ஏவுவதற்கு பலகோடி செலவாகிறது. அதை வடிவமைக்கும் திறமை, பலரின் அயராத உழைப்பு, துணிச்சல் எல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறது. ஒருவேளை ஏவுகணை விழுந்து விட்டால்... என துளி சந்தேகம் வந்தாலும் எல்லாம் பயனற்று போகும். நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்.

''வாழ நினைத்தால் வாழலாம் வழியா

இல்லை பூமியில் - ஆழக்கடலும் தோணி

ஆகும் ஆசை இருந்தால் நீந்தி வா'' என்னும் பாடலை கேட்டால் நமக்கு நம்பிக்கை கிடைக்கும்.

பிறந்தவர்கள் எல்லாம் ஒருநாள் இறக்கத் தானே போகிறோம். அதற்காக கவலைப்பட்டே காலத்தைக் கழிக்க முடியுமா? நாம் வாழப் பிறந்தவர்கள் என சிந்தித்தால் மட்டுமே மனதில் நம்பிக்கை பிறக்கும்.

மகாபாரதத்தில் நடந்த சம்பவம் இது.

திரவுபதியை மானபங்கப்படுத்த சபைக்கு இழுத்து வந்தான் துச்சாதனன். தவறை சுட்டிக்காட்ட வேண்டியவர்களோ துரியோதனனின் செஞ்சோற்றுக் கடனுக்காக வாயடைத்து நின்றனர்.

''கோவிந்தா, கோபாலா, ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா'' என்று கண்ணனை அழைத்தாள் திரவுபதி. துச்சாதனன் அவளது சேலையை வேகமாக இழுக்கவே ''கண்ணா! நான் படும் அவஸ்தை தெரியவில்லையா?'' என கைகளை நீட்டிக் கதறினாள்.

கண்ணன் அருளால் சேலை நீளத் தொடங்கியது.

துச்சாதனன் இழுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் விழுந்தான்.

அழைத்த முதல் குரலுக்கே கண்ணன் வரவில்லையே? - என்ற கேள்வி அவளது மனதை உறுத்தியது.

''கண்ணா... அழைத்ததும் உடனே ஏன் வரவில்லை?''

புன்னகைத்தபடி, ''நீ என்னை நம்பவில்லையே?''

'' என்ன...நம்பவில்லையா?''

'' மார்பின் குறுக்காக கட்டிய உன் கைகளைத் தானே நம்பினாய்? என் மீது நம்பிக்கை கொண்டு கைகளை மேலே நீட்டி அழைத்ததும் ஓடி வந்தேனே'' என்றான்.

கடவுள் மீது வைக்கும் பூரண நம்பிக்கைக்கு 'சரணாகதி' என்று பெயர்.

நம்பிக்கை என்பது இறைவன் நமக்கு அளித்த வரம்.

மன்னர் போஜராஜனின் நாட்டில் வறுமை என்பதே இல்லை. காரணம் அஷ்டலட்சுமி பூஜையை தினமும் செய்தார் அவர். வீரம், வெற்றி, மழலைச்செல்வம், கல்வி, சவுபாக்யம், செல்வம், தானியம், தைரியம் என எட்டு செல்வத்தையும் வழங்கும் இவர்களின் அருள் அனைவருக்கும் தேவை.

லட்சுமியை 'சஞ்சலா' என்றும் அழைப்பர். அதாவது ஓரிடத்தில் நிற்காதவள். ஒருநாள் போஜராஜன் பூஜை செய்த போது அஷ்ட லட்சுமிகள் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றனர்.

திடுக்கிட்ட மன்னர், ''அஷ்டலட்சுமித் தாயே! ஏன் எழுந்து விட்டீர்கள்? பூஜையில் ஏதும் குறை நேர்ந்ததா'' எனக் கேட்டார்

''மன்னா... உன்னிடம் இருந்து விடை பெற போகிறோம். நீ விரும்பும் வரம் ஒன்றைக் கேட்டால் உடனே தருகிறோம்'' என்றனர்.

''செல்வத் தாய்மார்களே... என் நாட்டு மக்கள் நலமாக வாழச் செய்த தங்களை வணங்குகிறேன். இன்று ஒருநாள் மட்டும் பொறுங்கள். நாளை காலையில் பூஜை நடத்திய பின் நான் கேட்கும் வரத்தைக் கொடுங்கள்'' என்றார்.

மறுநாள் பூஜை முடிந்ததும் அஷ்டலட்சுமிகள் எழுந்தனர்.

போஜன், ''தாயே... கேட்ட வரத்தை உடனே தருவீர்களா?''

''வாக்கை ஒருபோதும் மீற மாட்டோம்'' என்றனர்.

சட்டென மன்னர் '' தைரியலட்சுமித் தாயே! நீங்கள் மட்டும் என்னுடன் இருக்கும் வரம் போதும்'' என்றார்.

''தைரியம் தரும் இவளை விட்டு விட்டு எங்களால் போக முடியாது.'' என்று சொல்லி போஜராஜன் அரண்மனையில் மற்ற லட்சுமிகளும் நிலையாக தங்கினர்.

மனதில் தைரியம் இருந்தால் போதும். அதுவே நம்பிக்கையின் ஊற்று.

வயதான விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள். இதில் முதல் மூன்று மகன்கள் உழைப்பின்றி ஊதாரியாக வாழ்ந்தனர். கடைசி மகன் மட்டும் உழைப்பை நம்பி வாழ்ந்தான்.

''அன்பு பிள்ளைகளே! என் சொத்துக்களை எடுத்துக் கொண்டு உழைப்பால் உயருங்கள்'' என்றார். முதல் மூன்று மகன்களும் வீடு, வயல், தோட்டம் என விருப்பம் போல எடுத்துக் கொண்டனர். கடைசி மகனுக்கு கிடைத்தது என்னவோ தரிசு நிலமும், பழைய வீடும் மட்டுமே.

அவனது மனைவி, ''இப்படி ஏமாளியா இருக்கீங்களே... தரிசு நிலத்தை வச்சுட்டு என்ன பண்றது?'' என்றாள்.

''உழைப்பதற்கு கையும் காலும் நல்லா இருக்குது. முன்னேறுவோம் என்ற நம்பிக்கையும் இருக்குது'' என்று சொல்லி தரிசு நிலத்தை பண்படுத்தி பயிரிட்டான். அவன் மனசு போல பொன்னாக பயிர் விளைந்தது.

பொறுப்பின்றி வாழ்ந்த சகோதரர்களோ, நாளடைவில் கடனாளியாக மாறினர். ஆனால் நம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பி உயர்நிலை அடைந்தான்.

நம்பிக்கையே நம் கை.

தொடரும்

அலைபேசி: 98408 27051

லட்சுமி ராஜரத்னம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us