ADDED : ஜன 30, 2023 12:14 PM

ஜடாசுரன்
திரவுபதியின் பேரெழில் ஜடாசுரனை காமவயப்படுத்தியது. காட்டில் விறகு வெட்டியும், கனிகள் பறித்தும் வந்தான். மலர்களில் மாலை கட்டி திரவுபதியிடம் தந்தான். அவனை பாண்டவர்களுக்கும் பிடித்து விட்டது. அந்த ஆசிரமத்தில் இருந்த லோமச முனிவருக்கும் சேவை செய்தான். ஒருநாள் லோமசர் நித்ய கடமையாக நீராடி வரச் சென்றார். அங்கு முன்னோர் தர்ப்பண காரியங்களை செய்ய இருப்பதாக கூறிச் சென்றார். அவர் சென்ற பின் பீமனும் வனத்திற்குள் கனிகளை பறித்து வருவதாகக் கூறிப் புறப்பட்டான். இந்த வேளை தர்மன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் திரவுபதி மட்டுமிருந்தாள். ஜடாசுரனுக்கு தன் விருப்பம் நிறைவேறப் போகும் காலம் வந்து விட்டதாக தோன்றியது. இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என உணர்ந்தவன் தர்மன், நகுலன், சகாதேவன் ஆகிய மூவரும் அமர்ந்து தியானம் புரியும் வேளையில் மரக்கட்டையால் அவர்கள் தலையில் அடித்து மயங்கச் செய்து விட்டு திரவுபதியைத் துாக்கிக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி ஓட முற்பட்டான். ஆனால் அவளைத் தீண்ட முற்பட்ட போது அனல் ஜுவாலை வீசியது. அவளை அவ்வளவு சுலபமாக தொட்டுத் துாக்க முடியாது, அவள் தீயில் தோன்றியவள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. திரவுபதியோ, ''அடப்பாவி உன்னை சகோதரன் போலல்லவா கருதியிருந்தேன்'' என சீறினாள். ஜடாசுரன் காதில் வாங்காமல் தர்ம, நகுல, சகாதேவன் மூவரையும் தன் தோளில் வைத்தபடி ஓடத் தொடங்கினான். திரவுபதி அவனை தொடர்ந்து ஓடினாள்.
''நில்... இது மகாபாவம். எங்கு கொண்டு செல்கிறாய்? அவர்கள் மயக்கம் தெளிந்தால் அவ்வளவுதான்'' என கூக்குரலிட்டாள். ஒரு கட்டத்தில் தோளில் கிடந்த அவர்களோடு திரும்பிய ஜடாசுரன் தன் கொடிய அசுரத் தோற்றத்தோடு திரவுபதியைப் பார்த்து,'' என் இச்சைக்கு இணங்குவதாக சொல்; இவர்களை விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் கொன்று புசித்து விடுவேன்'' என சிரித்தான்.
''உன் அழிவுக்காலம் நெருங்கி விட்டது. உன்னை என் கணவர்களில் ஒருவரான பீமசேனரே வதம் செய்வார்'' என்றவள் அப்போதே பீமனை தியானித்தாள்.
சமநிலத்து வனம் நோக்கி நடந்தபடி இருந்த பீமன் மனதுக்குள்ளும் சட்டென ஒரு சலனம். திரவுபதி அழைப்பது போல ஒரு உள்ளுணர்வு. அடுத்த நொடியே திரும்பி நடக்கத் தொடங்கினான். அவ்வேளை வானில் பறந்த பறவைகளிடம் கூட அதிக சலசலப்பு. பீமனுக்கும் எங்கோ தவறு நடப்பதன் எதிரொலிதான் இந்த நிமித்தம் (சகுனம்) என்பது புரிந்தது. அப்போது ஒரு தேவபட்சி விண்ணில் பறந்தபடியே, ''மகாபலசாலியே... தெற்கு நோக்கி செல். உன் சகோதரர்களும் உன் மனைவியும் ஆபத்தில் உள்ளனர்'' எனக் கூறிச் சென்றது. பீமனும் ஓடத் தொடங்கினான். சிறிது நேரத்திலேயே ஜடாசுரனுடன் மயங்கி கிடக்கும் சகோதரர்களையும், திரவுபதியையும் கண்டான்.
பீமன் வரவும் திரவுபதிக்கும் உயிர் வந்தது போலிருந்தது. ஜடாசுரன் பீமனை எதிர்பார்க்கவில்லை. வந்து விட்ட நிலையில் அவனோடு மோதாமலும் இருக்க முடியவில்லை. இவ்வேளை தர்ம, நகுல, சகாதேவனும் மயக்கம் நீங்கி விழித்தனர். பீமனும், ஜடாசுரனும் யானையும் யானையும் மோதுவது போல யுத்தம் செய்ய முடிவில் பீமனே வென்றான். அசுரனை தலைக்கு மேல் துாக்கி வீசியதோடு கை கால்களை பிய்த்து திசைக்கு ஒன்றாக வீசினான்.
நடந்து முடிந்த நிகழ்வு தர்மனை சங்கடத்தில் ஆழ்த்தியது. ஐவரும் ஆசிரமத்துக்கு திரும்பினர். லோமசரும் தர்ப்பணம் முடிந்து திரும்பியிருந்தார்.
பிராமண வேடத்தில் ஜடாசுரன் நடமாடி பின் அவன் கொல்லப்பட்டதை அறிந்து வருந்தினார். ''வனவாச காலம் என்பது புண்ணியம் சேர்க்கும் காலமாக இருக்க வேண்டும். ஆனால் இது போல யுத்தம் செய்யும்படி ஆகி விடுகிறது. அசுரனைக் கொன்றது பாவமாகாது. ஆனாலும் அது பவித்ரமும் ஆகாது. இத்தகைய செயல்களுக்கு பரிகாரம் கைலாச கிரியிலுள்ள தேவப்ரயாகை எனும் மானசரோவரில் நீராடி அந்த ஈசனை கிரிவடிவில் கண்டு வணங்குவது தான்'' என்று கூறி கைலாச கிரி நோக்கிச் செல்லும் எண்ணத்தை உருவாக்கினார் லோமசர்.
அதே வேளை, ''கைலாச கிரியை பாதங்களால் நடந்தே அடைவதில் தான் திரேக ரூபமாய் நாம் செய்த பாவம் நீங்கும். ஆனால் அது மிகக் கடினம். ஈசனின் ஆசிகள் இல்லாதவர்கள் வழியில் மிருகங்களால் கொல்லப்படுவர். எனவே மிக கவனத்தோடும், பக்தியோடும் சென்றாலே கிரி உச்சியை அடைய முடியும்'' என்றார்.
திரவுபதி அவர் கூறியதைக் கேட்டு அஞ்சவில்லை. ''முனிவரே! எது வந்தாலும் சரி... நாங்கள் மானசரோவரில் நீராடுவோம். எங்கள் வனவாச காலத்திற்கும் பெரும் பொருளை உண்டாக்குவோம். உங்கள் ஆசிகள் எங்களுக்கு துணை நிற்கட்டும்'' என கூறி லோமசரை வலம் வந்து வணங்கி புறப்பட்டனர்.
செல்லும் வழியில் தர்மன் ''சகோதரர்களே! தர்மபத்தினியே! அர்ஜுனன் நம்மை விட்டுப் பிரியும் போது ஐந்து வருட வடிவில் தான் திரும்புவதாக கூறிச் சென்றிருந்தான். அந்த நாள் இன்னும் 17 தினங்களில் வர உள்ளது. அதன்பின் அர்ஜுனனும் கைலாச கிரிக்கே நேராக வந்து விடக்கூடும்'' என்றான்.
வழித்தடத்தில் பனிச்சரிவு... சில இடங்களில் மிருகங்களால் இடையூறு! சகலத்தையும் சகித்தபடி வந்தவர்களை 'விருஷபர்வா' முனிவரின் ஆசிரமம் வரவேற்றது. விருஷபர்வா உணவளித்து உபசரித்தார். அவர்கள் கைலாயம் செல்வது பற்றி அறிந்து மகிழ்ந்தார். இருப்பினும் அவர் முகத்தில் வாட்டம் ஏற்பட்டது. தர்மன் அதற்கான காரணம் கேட்டான்.
''பாண்டவர்களே! கைலாச கிரியை அடைவது சுலபமல்ல. இடையில் மால்யவான் என்னும் மலையை கடக்கையில் புதைந்து விடும் ஆபத்து உண்டு. அப்படியும் கடந்தால் 'கந்தமாதன பர்வதம்' என்ற மலை வரும். இது ஒரு மாயமலை... இங்கு திரும்பிய பக்கமெல்லாம் சகல விருட்சங்களும் கண்ணில் படும். இவைகளோடு சகல பறவை இனங்களையும் காணலாம். சகல மலர்களையும் கூட காணலாம். இவைகளோடு வண்டினங்களும் பூரணமாக இங்குள்ளன. நான்கு கொம்புகள் கொண்ட யானைக் கூட்டம் இந்த பர்வதத்தின் சிறப்பு.
இந்த பர்வதத்துக்குள் ஒருவர் நுழைந்தால் தாங்கள் யார் என்பதை மறந்து போவர். மலையின் எழிலில் மயங்கி, கிடைக்கும் கனிகளை எல்லாம் உண்டு, அழகிய காட்சிகளில் மயங்கி எப்போதும் போதையில் திரிந்து கொண்டிருப்பர். இந்த பர்வதத்துக்குள் இயற்கையின் வசம் சிக்காமல், மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து
இதை கடந்தால் 'ஆர்ஷ்டிஷேணர்' என்ற முனிவரின் ஆசிரமத்தை அடையலாம். ஆர்ஷ்டிஷேணரை அடைவது என்பது 'அரை கைலாயத்தை' அடைவது போன்றது. அதன்பின் அவர் உதவியில்லாமல் கைலாய கிரியை அடைய முடியாது. சுருக்கமாகக் கூறினால் இதுவரை நீங்கள் கடந்து வந்தது பெரிதேயில்லை. இந்த கந்தமாதன பர்வதத்தை கடந்து ஆர்ஷ்டிஷேணரை காண்பதே பெரிது'' என்று முடித்தார் விருஷபர்வா!
பீமனோ தர்மனோ அதைக் கேட்டு கலங்கவில்லை. ''மகரிஷி... தாங்கள் சொல்லச் சொல்ல எங்கள் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்த பூமண்டலம் தான் எத்தனை விந்தையானது... ஒருபுறம் பாலை. இன்னொரு புறம் பனிப்பொழில்!
நடுவில் சகலவகை தாவரங்களுக்குமான கந்தமான பர்வதம்! அந்த பர்வதத்தை நாங்கள் நிச்சயம் மயக்கமின்றி கடப்போம். தாங்கள் கூறியபடி ஆர்ஷ்டிஷேணரையும் சந்திப்போம்'' என்றான்.
விருஷபர்வா அதைக் கேட்டு மகிழ்ந்தவராக ஆர்ஷ்டிவஷேணரால் கூட காணப்பட முடியாத குபேரனின் வாசப்பகுதியும் அங்கேதான் உள்ளது. அதை இப்போது அவன் சகோதரன் 'மணிமாண்' என்பவன் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான்''என்றார்.
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்

