
ஒரு பழமொழி போல் தனக்கு பதில் சொன்ன கிருஷ்ணனை பார்த்த குந்தி, ''கிருஷ்ணா... இனி உன்னிடம் நான் வாதம் புரியப் போவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்'' என்றாள்.
''கர்ணனைக் கண்டு, தழுவ உன் நெஞ்சு துடிக்கிறதல்லவா?''
''அதில் என்ன சந்தேகம்?''
''போ... போய் அடங்கி கிடக்கும் பாசத்தை எல்லாம் ஆற்று வெள்ளமாய் பாயச் செய்.''
''செய்யத்தான் போகிறேன்''
''ஒரு விஷயம்''
''என்ன கிருஷ்ணா?''
''அப்போது உன் மற்ற பிள்ளைகளை மறந்து விடாதே''
''கிருஷ்ணா இது என்ன பேச்சு.. நான் மறந்தவளா, இல்லை என்னால் மறக்கத்தான் முடியுமா?''
''நான் மறந்து விடாதே என்று சொன்னது அவர்களையல்ல... அவர்கள் யுத்த களத்தில் நிற்கப்போவதை...''
''அதற்கும், கர்ணனை நான் சந்திப்பதற்கும் என்ன சம்பந்தம் கிருஷ்ணா?''
''என் அருமை அத்தையே... போர்க் களத்தில் கர்ணன் எதிர்த்து நிற்கப்போவது உனது ஐந்து பிள்ளைகளையும் தான். குறிப்பாக அர்ஜூனனை...''
''என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? அள்ளித் தரும் வள்ளலான என் கர்ணன், இனியுமா என் பிள்ளைகள் மீது பாணம் எய்வான்?''
''வழுக்கச் செய்யும் நீர்ப்பாசியை போன்றது என்பதால் தான், பாசம் என்று பெயர் வைத்தார்கள் போலும். அது உன் வரையில் சரியாக இருக்கிறது. நான் தொடக்கத்தில் சொன்னதெல்லாம் மறந்து விட்டதா? கர்ணன் போரிடப்போவது உறுதி. இதன் காரணமாகவே தனது பிறப்பு ரகசியத்தை அவன் தன் மனைவியிடம் கூட கூறவில்லை. என்னிடமும் யுத்தம் முடியும் வரை யாருக்கும் தெரிய வேண்டாமென கூறிவிட்டான்.''
''இது என்ன கொடுமை. கர்ணனா இப்படி சொன்னான்?''
''அப்படிச் சொன்னால் தான், அத்தை... அவன் கர்ணன். கர்ணன் என்றால் கர்ணமாகிய காது வழி பிறந்தவன் என்று மட்டும் பொருளல்ல. கர்ணன் என்றால் வள்ளல்... கடமை தவறாதவன்... நன்றி மறவாதவன்... கர்ம யோகி, என அனேக பொருளை உருவாக்கி விட்டான்.''
''கிருஷ்ணா இது என்ன பேச்சு.. இவ்வளவு தெரிந்த கர்ணனுக்கு, நடக்கப் போவது ஒரு தர்ம யுத்தம் என்பது தெரியாதா? அதில் துரியோதனன் பக்கம் துளியும் தர்மம் இல்லையென்று தெரியாதா?''
''என் அன்பான அத்தையே... இந்தக் கேள்விகள் பிதாமகர் பீஷ்மருக்கும், குருவான ரோணருக்கும், விவேகியான விதுரனுக்கும் கூட பொருந்தும் அல்லவா?''
கிருஷ்ணன் கேட்க குந்தியிடம் ஸ்தம்பிப்பு.
''என்ன பேச்சைக் காணோம்...?
அவர்களுக்கு எப்படி, எல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிடப் போகிறார்களோ, அப்படித் தான் கர்ணனும் போரிட போகிறான். உன் பிள்ளை என்பதால் அவன் பின் வாங்க போவதில்லை.''
''கிருஷ்ணா...''
''கவனமாக கேள்.. உன் பாசத்தை காட்டி போரிடாதே என நீயே உன் பிள்ளையை சிறுமைப்படுத்தி விடாதே...''
''கிருஷ்ணா... இந்த சங்கடத்தில் இருந்து நான் எப்படி விடுபடுவேன், நீ தான் வழி காட்ட வேண்டும்.''
''நான் காட்டுவது பெரிதல்ல. அதில் நீ தவறாமல் நடக்க வேண்டும். நடப்பாயா?''
கர்ணன் போரிடுவதை தடுக்க உன் பாசத்தால் முடியாது. ஆனால் அவனிடம் சில கட்டுப்பாடுகளை விதிக்க உன்னால் முடியும்.''
''எப்படிப்பட்ட கட்டுப்பாடு?'' கிருஷ்ணன் சொல்லி முடித்தான். குந்தியிடம் மறு பேச்சில்லை.
''இதை நீ சாதித்து விட்டால் இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி உன் பிள்ளைகளுக்கே.''
''நல்லது..அப்படியே செய்கிறேன்'' என்ற குந்தி கர்ணனை சந்தித்தாள். கட்டித் தழுவி கண்ணீரில் அவன் தோள்களை நனைத்தாள். கர்ணனும் அவள் கால்களை பற்றி, அழுது கண்ணீராலேயே பாத பூஜை செய்தான்.
அப்போது, ''என்னை யுத்தம் செய்யாதே.. என்று மட்டும் கூறி விடாதீர்களம்மா...'' என்று கர்ணன் கேவினான்.
''அப்படிச் செய்தால் நீ நன்றி கொன்றவனாவாய் என்பது எனக்கு தெரியும் மகனே. உன்னை நன்றியற்றவனாக்கி வாழச் செய்வதில் எனக்குத் தான் என்ன பெருமை இருந்துவிட போகிறது?'' என்ற குந்தியை கர்ணன் பிரமிப்புடன் பார்த்தான்.
''அம்மா.. நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன். ஒருவர், ஒன்றை கேட்டு நான் இல்லை என்றே சொன்னதில்லை. அப்படிப்பட்ட என்னிடம், யுத்த விலக்கை தர்மமாய் கேட்பீர்களோ என பயந்தேன். நல்லவேளை அப்படிக் கேட்டு, என்னை நீங்கள் சங்கடப்படுத்தவில்லை.''
''நான் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துங்கள் அம்மா...''
''மனதார வாழ்த்துகிறேன். யாரும் பெறாத வெற்றிகளை நீ பெற வேண்டும். என்னை மறந்தாலும் இந்த உலகம் உன்னை மட்டும் மறந்து விடவே கூடாது...''
''மிக்க மகிழ்ச்சி.. நான் கேட்டதை நீங்கள் தந்து விட்டீர்கள். நீங்கள் இப்போது என்னிடம் கேளுங்கள். அது எதுவாக இருந்தாலும் தருகிறேன்.''
கர்ணன் அப்படிச் சொன்ன நொடி, அவளுக்கு கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது.
'அத்தை... கர்ணன் எதைக் கேட்டாலும் தந்து விடுவான். அதை அவன் வாயாலேயே கேட்க வைப்பதில் தான் உன் சாதுர்யம் உள்ளது. அப்படி அவன் கேட்கும் பட்சத்தில் விட்டு விடாதே; அதில் தான் அர்ஜூனனின் உயிர் உள்ளது.'
கிருஷ்ணன் கேட்க சொன்ன வரத்தை, இது தான் தருணம் என்பது போல கேட்கத் தயாரானாள் குந்தி.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்