ADDED : மார் 24, 2017 10:27 AM

கமலா ஏக கவலையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தாள். இன்று அவளது மகன் ராஜா நம்பிக்கையுடன் வருவான். ஏழாவது படிக்கும் அவன், பள்ளியில் நூறு ரூபாய் தேர்வுக்கட்டணம் கேட்டிருக்கிறான். அதைக் கட்டாவிட்டால் அவனது படிப்பு நின்று விடும்!
'அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?'
சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை ராஜாவின் சப்தம் கலைத்தது. ''அம்மா! பணம் கட்டிடலாமா?'' ஆர்வமாகக் கேட்ட மகனிடம், ''இல்லையப்பா! என்னால் முடிந்தவரை முயற்சித்து விட்டேன். யாரும் கடனாகக் கூட தரவில்லை. உன் படிப்பை முடித்துக் கொள். நாளை முதல் என்னோடு வேலைக்கு வா,'' என்ற தாயைப் பரிதாபமாகப் பார்த்தான் ராஜா.
''அம்மா! மற்ற பிள்ளைகளுக்கெல்லாம் பணம் கிடைக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை... இந்தப் பணத்தை அவர்களுக்கு கிடைக்கச் செய்பவர் யார்... சொல்லம்மா... அவரிடம் கேட்டுப்பார்க்கிறேன்,'' என்று கேட்டான் ராஜா.
மகனின் அப்பாவித்தனமான கேள்விக்கு, ''அந்த வைகுண்டத்தில் இருக்கிறாரே பெருமாள்... அவர் தான் கொடுக்கிறார்,'' என்று சொல்லி வைத்தாள் அம்மா.
ராஜா வேகமாக அஞ்சல் நிலையத்தை நோக்கி ஓடினான். கையில் ஒரு அஞ்சல் அட்டை இருந்தது. அதை தபால் பெட்டியில் போட முயற்சித்தான். உயரத்தில் இருந்ததால் முடியவில்லை. இதை உள்ளிருந்த அதிகாரி கவனித்தார்.
''தம்பி! கொஞ்சம் பொறு! நான் உதவுகிறேன்,'' என்றவர் வெளியே வந்து கடிதத்தை வாங்கி, ''முகவரியெல்லாம் சரியாக எழுதியிருக்கிறாயா'' என்று பார்த்தவர், அதைப் பார்த்து அதிர்ந்தார்.
முகவரியில் ''சுவாமி பெருமாள், வைகுண்டம்' என்று எழுதியிருந்தது.
''இதை யாருக்கு எழுதியிருக்கே!''
''வைகுண்டத்தில் இருக்கிற பெருமாளுக்கு தான்''
குழம்பிப் போன அதிகாரி, ''அப்படி என்ன எழுதியிருக்கே!''
அம்மாவிடம் தேர்வுக்குரிய பணம் இல்லாததால், பெருமாளிடம் கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சொன்னான். அவனது பதில் அப்பாவித்தனமாக இருந்தாலும், அந்த அதிகாரி சொன்னார்.
''சரி... கவலைப்படாதே. உன் கடிதத்தை பெருமாளுக்கு விரைவு அஞ்சலில் பத்திரமாக அனுப்பி விடுகிறேன். நாளை மறுநாள் இங்கே வா...'' என்று அனுப்பி விட்டார். அவர் சொன்னது போலவே ராஜா அங்கு போனான்.
''பெருமாள் உன் விண்ணப்பத்தை ஏற்று பணம் அனுப்பி விட்டார். தேர்வுக் கட்டணத்துடன் கூடவே உனக்கு புது உடையும் எடுக்கச் சொல்லி 500 ரூபாயாக அனுப்பியிருக்கிறார். இதோ பிடி!'' என்று தன் கைப்பணத்தை அவனிடம் கொடுத்தார் தர்ம சிந்தனையுள்ள அந்த அதிகாரி.
அவருக்கு நன்றி சொல்லி விட்டு, அம்மாவிடம் ஓடி வந்து விஷயத்தைச் சொன்னான் ராஜா, அவள் நம்பவில்லை. இதற்குள் அதிகாரி அவன் வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னார்.
அந்தத்தாயின் கண்களுக்கு, பெருமாளாகத் தெரிந்தார் அதிகாரி.