
பாபா பேச ஆரம்பித்தார்.
''நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். என் அடியவனுக்காகப் பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன! பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான்!''
இப்படிச் சொன்ன பாபா, ''நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு! அங்கேயல்லவோ நான் வாழவேண்டும்!'' என்று சப்தம் போட்டுப் பாடலானார்.
அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்த சாந்தோர்க்கர் மெய்சிலிர்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமக்கு மாற்றல் உத்தரவு வந்தது பற்றி பாபா ஏற்கனவே அறிந்திருப்பதையும், அதை ஏற்கச் சொல்லியே பாபா இவ்விதம் பாடுகிறார் என்பதையும் அவர் உள்மனம் உணர்ந்துகொண்டது. கண்களில் கண்ணீர் வழிய, பண்டரிநாதன் வடிவில் பாபா தொடர்ந்து தம்மை ரட்சிக்க வேண்டும் என்று அவர் கீழே விழுந்து நமஸ்கரித்து வேண்டியபோது, பாபாவின் கரம் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது....
ஒருமுறை ஒரு திருடன் கொஞ்சம் நகைகளைத் திருடி பிடிபட்டு விட்டான். காவல் துறையினர் அவனை உதைத்து விசாரித்தார்கள்.
எப்படியாவது தப்பிக்க வேண்டுமே? 'தான் வைத்திருந்த திருட்டு நகைகள் எல்லாமே பாபாவுடையவை' என்று கூசாமல் பொய்
சொன்னான் அவன்! அப்படிச் சொன்னால் பாபா சிக்கிக் கொள்வார், தான் தப்பித்து விடலாம் என அவன் மனப்பால் குடித்தான்.
வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி திகைத்தார். அவருக்கு பாபா மேல் மரியாதை உண்டு. ஆனால், இந்தத் திருடன் இப்படிச்
சொல்கிறானே? இவன் சொல்படி நாம் பாபாவையல்லவா விசாரணை செய்ய வேண்டியிருக்கும்?
''அடேய்! உண்மையைச் சொல்!'' என அதட்டினார் நீதிபதி.
திருடனோ, தான் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கப் பார்த்தான். நீதிபதி சீற்றமடைந்தார்.
''சரி. வா. பாபாவிடமே விசாரிக்கலாம்!'' என்றுசொல்லி, பாபா தங்கியிருந்த மசூதிக்கு வந்தார் நீதிபதி. காவல் துறையினர் திருடனுக்கு விலங்கிட்டு உடன் அழைத்து வந்தார்கள்.
மசூதியில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.
'பாபா எதற்கு நகையைத் திருடப் போகிறார்? அவர் பக்தர்களின் மனங்களைத் திருடுபவர் அல்லவா? பாபா நகையைத் திருடியதாக நிரூபணமாகி சிறைத்தண்டனை கொடுத்து விடுவார்களோ? பாபாவுக்குச் சிறைவாசம் புதிதல்லவே? அவர் ஏற்கனவே பக்தர்களின் மனச்சிறையில் வாசம் செய்பவர் தானே?' இப்படியெல்லாம் எண்ணியவாறே பக்தர்கள் பாபாவைப் பார்த்து நெக்குருக நின்றார்கள்.
ஆனால், கல்லுளிமங்கனைப் போல் இருந்த அந்தத் திருடன் மட்டும், நகைகள் பாபாவுடையவைதான் என்பதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
நீதிபதி பாபாவிடம் விசாரணையை ஆரம்பித்தார்:
''பாபாஜி! தங்கள் உண்மையான பெயர் என்னவோ?''
''என்னை என் அன்பர்கள் 'சாய்பாபா' என்கிறார்கள். எனவே, அதுதான் என் பெயராக இருக்கும் என்று ரொம்ப காலமாக நம்பி
வருகிறேன்!''
உங்கள் தந்தையின் பெயரையாவது, உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா?
''என் தந்தை பெயரும் சாய்பாபா தான். நான் சாய்பாபாவுக்குப் பிறந்த சாயிபாபா!''
நீதிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட்டம் கிளுகிளுவென்று நகைத்துக் கொண்டிருந்தது! நீதிபதி கைக்குட்டையால்
முகத்தைத் துடைத்துக் கொண்டார். பின் நம்பிக்கையோடு கேட்டார்:
''உங்கள் குருநாதர் யார்?''
''வெங்குசா தான் என் குரு!'' ( வெங்குசா என்று பாபா குறிப்பிட்டது திருப்பதி வெங்கடாஜலபதியை என்று சிலர் கூறுகிறார்கள்.)
நீதிபதி அடுத்த கேள்வியைத் தயக்கத்தோடு கேட்டார்.
''தாங்கள் இந்துவா! இல்லை முஸ்லிமா?''
பாபா கணீரென்று அறிவித்தார்:
''நான் கபீர் வம்சத்தைச் சார்ந்தவன்!''
(கபீர்தாசர், அந்தணராய்ப் பிறந்து, முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். ராம் ரஹீம் இருவரும் ஒருவரே என்று கருதியவர். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.)
நீதிபதி, எச்சிலை விழுங்கிக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கலானார்:
''பாபாஜி! நீங்கள் என்ன தொழில் செய்துவருகிறீர்கள்?''
இந்தக் கேள்வியைக் கேட்டு, பாபா கடகடவென்று நகைத்தார். கூடியிருந்த அன்பர்கள் அந்த நகைப்பில் தென்பட்ட கம்பீரத்தால் கவரப்பட்டு மெய்சிலிர்த்தார்கள். பாபா அறிவித்தார்:
''படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் என் தொழில்கள்! இவற்றை நான் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறேன்!''
நீதிபதிக்கு இப்போது தலை சுற்றியது! அது பைத்தியக்காரத்தனமான பதில்போல் தோன்றியது. ஆனால், பாபாவைப் பைத்தியம் என்று கருத முடியவில்லை. அவர் அவ்வளவு தெளிவோடு நகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தார்.
என்ன செய்வதென தெரியாத நீதிபதி, தொண்டையைச் செருமிக் கொண்ட தொடர்ந்து கேட்கலானார்:
''உங்கள் வயது என்ன? விசாரணைப் பதிவேட்டில் உங்கள் வயதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது!''
''என் வயது சுமார் பல லட்சம் வருடங்கள். சரியாகக் கணக்கிட இயலவில்லை. இப்போது கொஞ்சம் வயோதிகம் அடைந்துவிட்டேன் இல்லையா? அதனால் கணக்குத் தடுமாறுகிறது. உங்கள் பதிவேட்டில் பாபாவின் வயது பல லட்சம் ஆண்டுகள் என்று குறித்துக் கொள்ளுங்கள்!''
இந்த பதிலைக் கேட்டுக் கூடியிருந்த கூட்டத்தினரில் பலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது. மொத்தத்தில் நீதிபதியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள் எல்லோரும்!
நீதிபதி தன் குரலை இயன்றவரை கடுமையாக்கிக் கொண்டு கேட்டார்:
''பாபா! இப்போது தாங்கள் என்னிடம் சொல்வதெல்லாம் உண்மைதானே? நீங்கள் ஏதும் என்னிடம் விளையாடவில்லையே?''
பாபா ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சொன்னார்:
''ஆகாயம் சாட்சியாக நான் இப்போது சொன்னதனைத்தும் முக்காலும் உண்மை! நான் சொன்னவற்றில் இம்மியளவு சந்தேகமும்
தேவையில்லை!''
அடுத்த மிக முக்கியமான கேள்வியை, நீதிபதி தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்:
''பாபா! இந்த வைர நகைகளெல்லாம் உங்களுடையவை என்கிறான் இந்தத் திருடன். இந்த நகைகளெல்லாம் இவன் சொல்வதுபோல் உங்களுடையவை தானா?''
பாபா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றறிய நீதிபதியும் பொதுமக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாபா கணீரென்று தெரிவித்தார்:
''ஆம். அவன் சொல்வது உண்மைதான். இந்த நகைகளெல்லாம் என்னுடையவைதான்!'' திருடன் மிகுந்த ஆச்சரியத்தோடு பாபாவைப் பார்த்தான். பொதுமக்கள் திகைத்து நின்றார்கள்.
நீதிபதியும் விக்கித்துப் போனார். பாபா தொடர்ந்து பேசலானார்.....
- அருள்மழை கொட்டும்
திருப்பூர் கிருஷ்ணன்

