ADDED : பிப் 24, 2017 10:22 AM

காஞ்சிப்பெரியவர் மீது ஈடுபாடு கொண்ட பக்தர் சுப்பிரமணியன். டாக்டரான இவர், பெரியவர் ஒருமுறை இளையாத்தங்குடியில் இருந்த போது தரிசிக்க வந்தார். பழக்கூடை ஒன்றை காணிக்கை அளித்து விட்டு வணங்கினார்.
அப்போது பெரியவர், “சாயங்காலம் தானே கும்பகோணம் போவாய்,” என்று கேட்டபடியே, நீராடுவதற்காகப் பின்பக்கம் சென்று கொண்டிருந்தார்.
தலையசைத்த சுப்பிரமணியன், பெரியவரின் சீடரான மேலூர் ராமச்சந்திர அய்யரிடம் சென்று பழக்கூடையை காட்டியபடி, “இந்த பழங்களை
பெரியவாளுக்கு உபயோகப்படுத்துங்கோ! மற்றவர்களும் எடுத்துக் கொண்டு போகாமல் பாத்துக்கோங்க,” என்று சத்தமாகக் கூறினார்.
பின்புறத்தில் நீராடிக் கொண்டிருந்த பெரியவரின் காதில் இது விழுந்தது. அன்று மாலை வீட்டின் முன்கட்டில் பெரியவர் உட்கார்ந்திருந்தார். அப்போது பெரியவர் சீடர் ஒருவரை அழைத்து, “மேலூர் மாமாவிடம், டாக்டர் மாமா கொண்டு வந்த பழக்கூடையை கொண்டுவரச் சொல்லு” என்றார். சுப்பிரமணியனும் இதைக் கவனித்தார். மேலூர் ராமச்சந்திர அய்யர் கூடையைக் கொண்டு வந்தார். பெரியவர் பழக்கூடையை வைத்துக் கொண்டு
எதிரிலுள்ள கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் கடந்ததும், பெரியவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். சில நரிக்குறவர்கள் அங்கு கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
பெரியவர் முன் பழக்கூடை இருப்பதைப் பார்த்த அவர்கள், 'சாமியோவ்.. சாமியோவ்...' என்று குரல் கொடுத்தனர். பெரியவர் அந்தப் பழங்களில் சிலவற்றை அவர்களுக்கு வழங்கும்படி சீடரிடம் உத்தரவிட்டார்.
குறவர்களும் ஆளுக்கொரு பழத்தைப் பெற்றுக் கொண்டு பெரியவரை வணங்கிச் சென்றனர். சுப்பிரமணியனும், மற்ற பக்தர்களும் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தனர்.
சிறிது நேரம் மவுனம் காத்த பெரியவர் சுப்பிரமணியத்திடம்,“நீ காலையில மேலூர் ராமச்சந்திர அய்யரிடம் சொன்னது காதில் விழுந்தது. அத்தனை
பழத்தையும் ஒரே நாளில் சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? நாலு நாள் வச்சிருந்தா வீணா அழுகிப் போயிடும். நீ கொண்டு வந்த பழங்களை எத்தனை பேர் கொள்ளை மகிழ்ச்சியுடன் இப்போ வாங்கினாங்க! என்னிடம் இருக்கிற ஆப்பிள் சந்திர மவுலீஸ்வரருக்கு நைவேத்யம் பண்ணினது. அதில் ஒண்ணை வாங்கிக்கோ” என்று சொல்லி டாக்டருக்கு கொடுத்து விட்டு, மற்ற பழங்களை பக்தர்களுக்கும் வழங்கினார். தானும் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
எல்லாருக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்பதைப் பெரியவர் மூலம் உணர்ந்த சுப்பிரமணியன், பெரியவர் இளையாத்தங்குடியில் இருந்த வரையில், தினமும் பழங்களை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.