ADDED : மே 26, 2023 10:57 AM

காஞ்சி மஹாபெரியவரின் பக்தரான ரமணன் என்பவருக்கும், உஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஓரிரு மாதம் கழிந்தபின், ''உன் மனைவிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. பவுர்ணமியன்று பரிகார பூஜை செய்து விட்டு, புதிய திருமாங்கல்யம் அணிந்தால் தான் தோஷம் தீரும்.
இதற்கு ரூபாய் தேவைப்படும். பரிகாரம் செய்யாதிருப்பது நல்லதல்ல'' என்றார் உறவினர் ஒருவர்.
முன்பணமாக இருநுாறு ரூபாய் கொடுத்த ரமணன், தன் மனைவியிடம் ஆலோசித்தார். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. நாம் மஹாபெரியவரிடம் ஆசி பெற்றால் போதும் என மனைவி சொல்ல, காஞ்சிபுரம் சென்றனர்.
மஹாபெரியவரிடம் நடந்ததை தெரிவித்த போது, ''உனக்கோ, உன் மனைவிக்கோ தோஷம் இல்லை. பரிகார பூஜை செய்யத் தேவையில்லை. கொடுத்த முன்பணத்தை கேட்க வேண்டாம்'' என்று சொல்லி பிரசாதம் கொடுத்தார். நிம்மதியாக ரமணனும் புறப்பட்டார்.
விஷயம் அறிந்த உறவினரோ, கோபத்துடன் பணத்தை ரமணனிடம் திரும்பக் கொடுத்தார். அதை அவர் மடத்தின் உண்டியலில் செலுத்தினார். தற்போது ரமணன், உஷா தம்பதியர் 60, 80ம் கல்யாணம் முடிந்து நலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இது மட்டுமல்ல... இத்தம்பதிக்கு ஆறாண்டு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. மருத்துவரிடம் பரிசோதித்த போது கருப்பையில் கட்டி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே கரு உருவாகும் எனத் தெரிவித்தார்.
காஞ்சி மஹாபெரியவரிடம் மனைவியின் நிலையைச் சொல்லி முறையிட்டார் ரமணன். சுவாமிகளின் வழிகாட்டுதலுடன் ஒரு மருத்துவரை அணுகினார். அவர் கொடுத்த மருந்துகளை மஹாபெரியவர் ஆசீர்வதித்தார்.
ஆறுமாத காலம் உஷாவும் மருந்து சாப்பிட்டு வந்தார். ஒருநாள் மடத்திற்குச் சென்ற உஷாவிடம் மாதுளம்பழம் ஒன்றைக் கொடுத்து சாப்பிடுமாறு கூறினார் மஹாபெரியவர். உஷாவும் அதைச் சாப்பிட்டு மருத்துவமனைக்குச் சென்ற போது கருப்பையில் கட்டி இருந்ததற்கான சுவடே இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன்பின்னர் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களும் திருமணமாகி பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com