ADDED : அக் 20, 2023 05:10 PM

விஜயதசமியன்று காஞ்சி மடத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் தரிசனத்திற்காக நின்றிருந்தான். நிறைய பக்தர்கள் தரிசிக்க வருவதால் சிறுவனின் மனதிற்குள், 'மஹாபெரியவர் முக்கிய பிரமுகரோ' என எண்ணத்துடன் அங்குமிங்கும் பார்த்தான்.
மஹாபெரியவருக்கு அருகில் அவன் வந்ததும், என்ன விஷயம் எனக் கேட்பது போல பார்த்தார் சுவாமிகள்.
''எனக்கு உங்க கையெழுத்து வேணும்'' என ஒரு நோட்டை நீட்டினான்.
எதிலும் கையெழுத்திடும் வழக்கமில்லை என்றாலும் சிரித்தபடி, ''எதற்கு கையெழுத்து கேட்கிறாய்?'' என்றார் சுவாமிகள்.
''பிரபலங்களின் கையெழுத்தை சேகரிப்பது என் வழக்கம். உங்களைப் பலரும் தரிசிக்க வருவதால் நீங்களும் முக்கிய பிரமுகர் தானே? அதனால்தான் கேட்கிறேன்'' என்றான்.
பக்தர்கள் சிரிக்க, சுவாமிகளும் சிரித்தார்.
மடத்தின் நிர்வாகியைக் கூப்பிட்டு, ''இவனின் நோட்டில் மடத்து சீல் வைத்து, 'நாராயண நாராயண' என்று எழுதி கையெழுத்திட்டுக் கொடு'' என்றார். அவரும் கையெழுத்திட சிறுவனுக்கு சந்தோஷம். விடைபெறத் தயாரானான்.
''கொஞ்சம் பொறு'' என மஹாபெரியவர் சொல்ல அவன் நின்றான்.
மடத்து ரிஜிஸ்டரை நிர்வாகியிடம் எடுத்து வரச் சொல்லிய மஹாபெரியவர். ''உன்னோட கையெழுத்து எனக்கும் வேணும். இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்திடு'' என சிறுவனிடம் நீட்டினார்.
ஆர்வமுடன் கையெழுத்திட்டான். அவன் கிளம்பிய பின்னர்,''அந்தப் பையன் என்னை முக்கியமானவனாக நினைக்கிறான். அதனால்தான் கையெழுத்து கேட்டான். அவனிடம் கையெழுத்து கேட்டதற்கு விளக்கமாக, 'தானும் முக்கியமானவன் தான் என்ற எண்ணம் அவனுக்கும் வர வேண்டும். அப்போது தான் வாழ்வில் பிடிப்பு உண்டாகும். வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவான். அதனால்தான் கையெழுத்து வாங்கினேன். முக்கியம் இல்லாதவர் என்று உலகில் யாருமில்லை'' என்றார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.