ADDED : மார் 31, 2015 11:52 AM

ஐயப்பனின் அவதார நாள் பங்குனி உத்திரம். இந்த இனிய நாளில், ஐயப்பனைப் பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கிறார் காஞ்சி மகாபெரியவர்.
அறிவைத் தருபவர் சிவன். உலக உயிர்களைக் காப்பவர் நாராயணன். இப்படி சொல்வதால், சிவ விஷ்ணுவை வேறு வேறாக கருதக்கூடாது. ஒரே கடவுளே சிவனாகவும், நாராயணனாகவும் வடிவம் கொண்டிருக்கின்றனர்.
பனிமலையின் கீழ் வீற்றிருக்கும் சிவன், உடம்பெல்லாம் விபூதி, புலித்தோல் ஆடை, ஜடாமுடி கொண்டு தவ வாழ்வு நடத்துகிறார். அவர் இருக்கும் இடத்தில் சாந்தம் நிறைந்திருக்கும். வைகுண்டத்தில் பட்டு பீதாம்பரத்துடன் நாராயணர் காட்சி தருகிறார். மார்பில் லட்சுமி வசிப்பதால், செல்வச் செழிப்புடன் ராஜாதி ராஜாவாக இருக்கிறார்.
சிவனுக்கு அபிஷேகம் செய்வதில் விருப்பம். வட மாநிலக் கோயில்களில், சிவலிங்கத்திற்கு மேல் தாரா பாத்திரம் வைத்திருப்பார்கள். அதிலிருந்து தண்ணீர் சிவன் தலையில் சொட்டியபடி இருக்கும். அலங்காரப் பிரியரான நாராயணருக்குப் பட்டும், பொன் ஆபரணங்களும் சூட்டி அழகு பார்க்கிறோம்.
''அலங்காரப் ப்ரியோ விஷ்ணு: அபிஷேக ப்ரியோ சிவ:'' என்று சொல்வார்கள்.
சிவனின் அழகு, மனதை அடங்கச் செய்து அமைதி அளிக்கிறது. நாராயணனின் அழகு மனதைக் கூத்தாடச் செய்கிறது.
ஸ்ரீமன் நாராயணன், ராம, கிருஷ்ண அவதாரங்கள் எடுத்த போது அவர்களின் அழகு கண்டு அனைவரும் மயங்கினர்.
இப்படி அழகு மிக்க அவர், மோகினி என்னும் பெண் வடிவம் கொண்டு எல்லோர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார். ஞானியான சிவன் கூட, அதில் மயங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அப்போது மோகினியான விஷ்ணுவும், சிவனும் இணைந்து மகாஜோதி உருவானது. அதுவே ஐயப்பனாக வடிவம் கொண்டது.
தாயான மோகினியிடம் இருந்து காக்கும் சக்தியையும், தந்தை சிவனிடமிருந்து ஞானத்தையும் பெற்று 'ஹரிஹர புத்திரன்' என பெயர் பெற்றார் ஐயப்பன். சாஸ்தா, ஐயன், ஐயனார் என பெயர்களும் உண்டு.
'ஐயன்' என்பது 'ஆர்ய' என்பதன் திரிபு. 'மதிப்புக்குரிய' என்பது இதன் பொருள். கேரளத்தில்'ஆரியங்காவு' என்று ஐயப்பனுக்கு
உரிய காட்டுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். சிவனின் மற்ற பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு கூட இல்லாத சிறப்பாக, இவரை
மட்டும் 'மதிப்புக்குரியவர்' எனச் சொல்வது குறிப்பிடத்தக்கது.
'சாஸ்தா' என்பதை தமிழில் சாத்தன் என்பர். தமிழ்நாட்டு கிராமங்களில் முக்கிய தெய்வம் சாஸ்தா தான். சாத்தனூர் என்ற பெயரில் பல கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. காவல் தெய்வமான இவர், காற்று, கருப்பு முதலிய தீய சக்திகளில் இருந்து நம்மைக் காக்கிறார்.
நம்மூரிலுள்ள கிராமத்து ஐயனாரே, கேரளத்தில் ஐயப்ப சுவாமியாக உலகப் புகழ் பெற்றிருக்கிறார். ஐயப்பனின் அவதார தினம் பங்குனி உத்திரம். இந்தநாளில், அவரது திருநாமம் சொல்லி வழிபட்டால் சகல வளமும், அறிவு விருத்தியும் உண்டாகும்.
