ADDED : டிச 13, 2019 10:07 AM

துறவி ஒருவர் ஆற்றங்கரையில் தண்ணீர் ஓடும் அழகை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படியே மனம் ஒருமுகப் பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிய வேண்டும் என்ற தேடல் அவனுக்குள் இருந்தது.
''சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை சொல்ல முடியுமா?'' எனக் கேட்டான்.
துறவியோ கண்டு கொள்ளாமல் அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. ''சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?'' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.
''கேள்விக்கான பதிலை சொல்லி விட்டேனே!'' என்றார்.
இளைஞனுக்கு கோபம். ''வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே!'' என சற்று கோபமாகவே கேட்டான். ''மகனே! மவுனமே என் பதில்'' என்றார் துறவி.
இளைஞனோ, ''இப்படி புதிர் போட்டால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''ஆன்மிகத்தின் ஒட்டு மொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைக்குள் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்'' என்றார் துறவி.