/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
விமானத்தில் அடிக்கடி பறப்பவரா? சிவகாசி விஸ்வநாதரை வணங்குங்க!
/
விமானத்தில் அடிக்கடி பறப்பவரா? சிவகாசி விஸ்வநாதரை வணங்குங்க!
விமானத்தில் அடிக்கடி பறப்பவரா? சிவகாசி விஸ்வநாதரை வணங்குங்க!
விமானத்தில் அடிக்கடி பறப்பவரா? சிவகாசி விஸ்வநாதரை வணங்குங்க!
ADDED : அக் 08, 2010 04:32 PM

மனைவி, குழந்தைகள், உறவுகள், பணம், பங்களா என்ற பற்றுடன் வாழ்வதே, அர்த்தமுள்ள வாழ்க்கை என்கிறோம். இந்த ஆசைகள் தற்காலிகமானவையே. இதற்கெல்லாம் மேலான பேரின்பத்தைத் தரவல்லவராக திகழ்கிறார் சிவகாசி காசி விஸ்வநாதர். அடிக்கடி விமானப்பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பளிப்பராக இவர் உள்ளார்.
தலவரலாறு: குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய, காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனிதநீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி சென்றான். பல நாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வனக் காடாக இருந்தது. மறுநாள் அவனுடன் வந்த அரசிக்கு பயணம் செய்யமுடியாதபடி உடல் நிலையில் கோளாறு ஏற்பட்டது. உடன் வந்த காராம்பசுவும் அவனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வில்வ வனத்தடியிலேயே காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை மன்னன் பிரதிஷ்டை செய்தான். காசி விஸ்வநாதரின் பெயரால் சுவாமிக்கு 'விஸ்வநாதர்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இக்கோயிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்தனர். சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் பணிகள் 1445ம் ஆண்டில் துவங்கப்பெற்று 16ம் நூற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றதாக தகவல் இருக்கிறது. மன அமைதி தருபவர்: காசி சென்றவர்கள் பற்று ஆசையை விடுவதற்காகவே செல்கின்றனர். இவ்வளவு போக்குவரத்து மிகுந்த காலத்திலும் கூட காசிக்கு செல்ல முடியாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காசிக்குப் பதிலாக இத்தலத்து இறைவனைத் தரிசித்தாலே போதுமானதென்ற நம்பிக்கை இருக்கிறது. சுவாமியுடன் விசாலாட்சி அம்மையும் இங்கு தரிசனம் தருகிறாள். இவர்களை வணங்கினால் மன அமைதி கிடைக்கிறது. பவுர்ணமி, சங்கடஹரசதுர்த்தி மற்றும் பிரதோஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வெளிநாடு செல்கிறீர்களா: சிவகாசியில் கோயிலைக் கட்டிய பராங்குச மன்னன் தன் தவ வலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் துறவுநிலை மேற்கொண்ட பின் 'பராசரர்' என்று அழைக்கப் பட்டான். இதன்பின் தினமும் ஆகாய மார்க்கமாக சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு சிவகாசியிலும் இறங்கி காசிலிங்கத்தை வழிபட்டு பின் தென்காசி செல்வது வழக்கம். எனவே, விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் சிவகாசி, காசி விஸ்வநாதரை 11 வாரம் சென்று தரிசிப்பதன் மூலம் பாதுகாப்பான பயணம் அமைவதாக நம்பிக்கையுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு செல்பவர்களும், தொழிலதிபர்களும் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தொழில் வளம் பெருக வழிபாடு: சிவகாசிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல ஊர்களை சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து போனார்கள். அவர்கள் இங்குள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த தவறுவதில்லை. வருமான அதிகரிப்பால், ஒரு கட்டத்தில் கிராமமாய் இருந்த நகரமாகி விட்டது. தங்கள் வளர்ச்சிக்கு காரணம இந்த காசி விஸ்வநாதரே என்பது வணிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அச்சுத்தொழில், காலண்டர், படங்கள், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தியில் உலகப் புகழ் பெற்று 'குட்டி ஜப்பான்' என்று புகழப்படும் அளவுக்கு இவ்வூர் வளரக் காரணமாகி விட்டார் சிவகாசி விஸ்வநாதர். தங்கள் தொழில் வளம் பெருக வணிகர்கள் விஸ்வநாதருக்கு 11 வாரம் சிவவழிபாடு செய்து தொழில்களை துவக்கி வெற்றி பெறுகின்றனர். கோயில் சிறப்பு: சிவன் காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால் 'சிவன் காசி' என்று அழைக்கப்பட்ட இவ்வூர் 'சிவகாசி' என்று சுருங்கியது. வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி உள்ளன. திருப்பதிக்கு முதல் எழுத்தும், இறுதி எழுத்தும் ஒரே எழுத்தாக உள்ளது போல, இத்தலத்துக்கும் சிறப்பிருக்கிறது.
திருவிழா: வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனியில் நடராஜருக்கு திருமஞ்சனம், ஆடியில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுத்திருவிழா, ஆவணி மூலத்திருவிழா (பிட்டுத்திருவிழா), புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை, ஐப்பசியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், கார்த்திகை திருவிழா, மார்கழியில் திருவாதிரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசி சிவராத்திரி விழா, பங்குனி உத்திரம்.
இருப்பிடம்: சிவகாசி பஸ் ஸ்டாண்டை ஒட்டி, மெயின் பஜாரில் கோயில் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
நடைதிறப்பு: காலை 5.45- பகல் 12.15 மணி, மாலை 4- இரவு 9.15 மணி.
போன்: 95009 16870, 04562 272 411.