
தமிழகத்தின் பெரிய சிவலிங்கத்திற்கு நடக்கும் அன்னாபிஷேகத்தை கண்குளிர காண ஆசையா... விரையுங்கள் அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு!
சிவபெருமானுக்கு தென் திசையில் ஒரு கயிலாயம் அமைக்க விரும்பிய ராஜராஜச்சோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். இதே பாணியில் கங்கை கொண்ட சோழபுரத்தில் காண்போர் பிரமிக்கும் விதத்தில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டினான் ராஜேந்திரச்சோழன்.
தஞ்சையிலுள்ள லிங்கத்தை விட சற்று கூடுதலாக 13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லால் ஆன சிவலிங்கத்தை இங்கு நிறுவினான். புனிதமான கங்கை பாயும் காசியின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான். பொற்குடங்களில் கங்கை தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தினான். இதனால் இத்தலம் 'கங்கை கொண்ட சோழபுரம்' எனப் பெயர் பெற்றது.
கருவறையில் இருபுறமும் ஆறடி உயரத்தில் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறை குளிர்ச்சியாக இருக்கும் விதத்தில் சந்திரகாந்தக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய தனி சன்னதியில் 9.5 அடி உயரத்தில் பெரியநாயகி அம்மன் அருள்கிறாள்.
இங்குள்ள தீர்த்தம் சிங்க வடிவில் உள்ளதால் 'சிம்மக்கிணறு' எனப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், பிரம்மா, திருமால், சரஸ்வதி, சண்டேஸ்வர அனுக்கிரக மூர்த்தி, பைரவர் சிற்பங்கள் காண்போரை கவரும் விதத்தில் உள்ளன.
இக்கோயிலில் நவ.5 ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. 25 சிவாச்சாரியார்கள் ஒன்றுகூடி காலை 9:00 - மாலை 5:00 மணி வரை 100 மூடை அரிசியாலான அன்னத்தால் அபிஷேகம் செய்வர். மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனையும், அதன்பின் அதிரசம், எள் உருண்டை, தேன்குழல் ஆகியவற்றால் சிவலிங்கத்தை அலங்கரிப்பர். இரவு 1:00 மணி வரை வத்தல்குழம்புடன் அபிஷேக அன்னம் பக்தர்களுக்கு தரப்படும்.
எப்படி செல்வது: கும்பகோணம் - சென்னை சாலையில் 35 கி.மீ.,
விசேஷ நாள்: ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97513 41108
அருகிலுள்ள கோயில்: ஓமாம்புலியூர் துயர்தீர்த்த நாதர் (சிவன்) 23 கி.மீ., (துன்பம் தீர...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04144 - 264 845

