ADDED : ஜன 30, 2025 12:44 PM

பிப்ரவரி 4 - ரத சப்தமி
கிரகதோஷம் உள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவிலில் உஷா, பிரத்யுஷா தேவியுடன் உள்ள சூரியபகவானை தரிசியுங்கள்.
காலவ முனிவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. நவக்கிரகங்களை வழிபட நோய் நீங்கியது. உடல்நலத்துடன் வாழும் வரத்தையும் பெற்றார். இதையறிந்த பிரம்மா, '' சிவபெருமானின் ஆணைப்படி பாவ, புண்ணிய பலனை மட்டும் வழங்கலாம். ஆனால் நீங்கள் எப்படி வரம் தரலாம்? தொழுநோய் உங்களுக்கும் வரட்டும்'' எனச் சபித்தார்.
உடனே நவக்கிரகங்கள் எருக்கம் செடி நிறைந்த இங்கு தங்கி சிவனை பூஜித்தனர். மனம் இரங்கிய சிவன் நோயைப் போக்கியதோடு, இங்கு தங்கி பக்தர்களுக்கு அருள்புரியச் சொன்னார். சூரியன் மூலவராக இருப்பதால் சூரியனார் கோவில் எனப் பெயர் ஏற்பட்டது.
செந்தாமரை மலர்களை சூரியன் ஏந்தி இருப்பதால் 'சூரிய நாராயணர்' என அழைக்கின்றனர். மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சூரியனின் உக்கிரத்தை போக்கும் விதமாக கருவறைக்கு எதிரில் குருபகவான் உள்ளார். அருகில் இவரது வாகனமாக குதிரை உள்ளது.
முதலில் கோள் தீர்த்த விநாயகர், சூரியன், குரு, சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு என்ற வரிசையிலும், கடைசியாக தேஜ சண்டேஸ்வரரையும் வழிபட வேண்டும். இதனால் கிரகதோஷம் தீரும். சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் ஞாயிறன்று விரதமிருந்து வழிபடுவது நல்லது. இங்கு வருவதற்கு முன் திருமங்கலக்குடி பிராணநாதர், மங்கலநாயகி கோயிலுக்கு செல்ல வேண்டும்.
எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாள்: ஆவணி ஞாயிறு, பொங்கல், ரதசப்தமி, மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0435 - 247 2349
அருகிலுள்ள கோயில்: திருமங்கலக்குடி பிராணநாதர் 1 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0435 - 247 0480