ADDED : மே 07, 2026 09:25 AM

குழப்பத்தில் முடிவு எடுக்க தடுமாறுவோர் பலர் இருக்கின்றனர்.
உயிரே போனாலும் பயமில்லை என்று துணிவுடன் செயல்படுவோர் சிலர். இந்த மனஉறுதியை நமக்கு அளிப்பவராக திருச்சி அருகிலுள்ள கற்குடி உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் இருக்கிறார். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் இவரை வழிபடுவது சிறப்பு.
மிருகண்டு முனிவருக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. தனக்கு மகன் பிறக்க வேண்டும் என சிவனை நோக்கி தவமிருந்தார். ''புத்தி இல்லாத, உடல்குறையுள்ள நுாறு வயது வரை வாழும் மகன் வேண்டுமா? பதினாறு ஆண்டு வாழ்ந்தாலும் புகழுடன் வாழும் புத்திசாலி மகன் வேண்டுமா?” எனக் கேட்டார் சிவன்.
புத்திசாலி மகன் வேண்டும் என்றார் முனிவர். அதன்படி ஞானபுத்திரனாக பிறந்த குழந்தைக்கு 'மார்க்கண்டேயன்' என பெயரிட்டார் முனிவர். 16 வயதை அடைந்ததும் உயிரைப் பறிக்க வந்தார் எமதர்மன். சிவன் கோயில்களுக்குள் ஓடிச் சென்று கருவறையில் ஒளிந்து வாழ்ந்தான் மகன்.
மரணத்தின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என உறுதியெடுத்த மார்க்கண்டேயன் கடைசியாக உய்யக்கொண்டான் திருமலையை அடைந்தான். சிவனிடம் பிரச்னையைச் சொல்லி சரணாகதி அடைந்தான். எமனிடம் இருந்து காப்பாற்றி, 'என்றும் பதினாறு' என வாழ வரமளித்தார். அங்கிருந்து திருவேற்காடு கோயிலுக்கு வரவழைத்து 'சிரஞ்சீவியாக என்றும் வாழ வழிகாட்டினார்.
மார்க்கண்டேயருக்கு வாழ்வு தந்ததால் இங்கு சுவாமிக்கு 'உஜ்ஜீவநாதர்' (அழியா வரம் தருபவர்) எனப் பெயர். கேட்டதை கொடுப்பவர் என்பதால் சுவாமி 'கற்பகநாதர் எனப்படுகிறார். இங்குள்ள அம்மன் பெயர் அஞ்சனாட்சி. அஞ்சனம் என்றால் கண் மை. அம்மனின் கண்களில் மை தீட்டப்படுவதால் இப்பெயர். பாலாம்பிகை என்ற பெயரில் இன்னொரு அம்மன் சன்னதியும் உள்ளது.
இக்கோயிலில் லட்சுமியின் சகோதரி ஜேஷ்டாதேவிக்கு சன்னதி உள்ளது. நிம்மதியாக துாங்கும் பாக்கியத்தை அருள்பவள் இவள். ஜேஷ்டாவின் ஒருபுறத்தில் மாடு முகம் கொண்ட மாடனும், மறுபுறத்தில் பணிப்பெண்ணும் உள்ளனர்.
இங்குள்ள உய்யக்கொண்டான் திருமலையின் உயரம் 50 அடி. கோயிலைச் சுற்றி குடமுருட்டி, பொன்னொளி ஓடை, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக்கிணறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. அருகில் உய்யக்கொண்டான் ஆறும் ஓடுகிறது.
எப்படி செல்வது: திருச்சி-வயலுார் சாலையில் 5 கி.மீ., (சோமரசம் பேட்டை அருகில்)
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி பிரம்மோற்ஸவம்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 94426 28044
அருகிலுள்ள கோயில்: திருச்சி தாயுமானவர் 5 கி.மீ., (சுகப்பிரசவம் நடக்க...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 0431 - 270 4621
