ADDED : ஆக 13, 2026 08:27 AM

ராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மனை தரிசிப்பவர்கள் புத்திசாலியாக மாறுவார்கள்.
முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னர் ஒருவர், விநோதமான போட்டியை அறிவித்தார். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி. அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும் முயன்று தோற்றனர். அப்போது அவ்வூர் வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறி அரசவைக்குச் சென்றாள். ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில் சர்க்கரைப்பாகு தடவிய நுாலை வைத்தாள்.
சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று நுாலை இழுத்து வந்தன. சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண் நுாலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னர் அறிவாளியான அப்பெண்ணிற்கு பரிசு வழங்கியதோடு, அவளையே திருமணம் செய்ய விரும்பினார். அப்பெண் மறுத்தும் கேட்கவில்லை.
மனம் வெறுத்தவள் தீக்குளித்து உயிரை விட்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்தாள் அப்பெண். அவளை அடக்கம் செய்த இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் 'முத்தால பரமேஸ்வரி' என பெயர் பெற்றாள்.
வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது கோயில். கருவறையில் முத்தால பரமேஸ்வரியம்மன் நான்கு கைகளில் சூலம், கபாலம், வாள், உடுக்கை ஏந்தி தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் உள்ளது. புத்திசாலியாக இருக்க முத்தால அம்மனுக்கு பொங்கல் நைவேத்யம் செய்கின்றனர். அம்மை நோய் தீர அதிகளவில் வேண்டுகின்றனர்.
வெள்ளியன்று விசேஷ பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத்திராஜா, கருப்பணசாமி சன்னதிகள் உள்ளன.
அம்மன் இங்கு உக்கிரமாக இருப்பதால் மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது அம்மனுக்கு விதவிதமான மலர்களை பக்தர்கள் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்மனின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்க பூக்களால் அலங்காரம் செய்கின்றனர்.
பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர். அன்று ரிஷப வாகனத்தில் அம்மன் வலம் வருவது சிறப்பு.
எப்படி செல்வது: பரமக்குடியில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 94434 05585, 04564 - 229 640
அருகிலுள்ள கோயில் : எமனேஸ்வரமுடையார் 2 கி.மீ., (நீண்ட ஆயுளுக்கு...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 94860 13533
