
நவக்கிரக மண்டலத்தில் சூரிய பகவான் நடுவில் இருந்து இவ்வூலகை இயக்குகிறாரோ அது போல திருப்பூர் மாவட்டத்திலுள்ள சென்னிமலை, சிவன்மலை, வட்டமலை, ஊதியூர்மலை, அரசணாமலை, வெள்ளிமலை, மருதமலை, கதித்தமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள அலகுமலையில் இருந்து அருள் செய்கிறார் முருகப்பெருமான். வானவஞ்சேரி என்னும் பெயருடைய இம்மலையிலுள்ள அவரை தரிசிக்க வாருங்கள்... மனநிறைவோடு செல்வீர்கள்.
அலகு என்பதற்கு 'மூக்கு' என ஒரு பொருளுண்டு. மயிலின் மூக்கினை போல இந்த மலை இருப்பதாலும், ஆங்கிலேயர் காலத்தில் இம்மலையினை மையமாக வைத்தே அளவீடு செய்ததாலும், இம்மலையின் அடிவாரத்தில் அழகாபுரி என்ற பெயரில் அம்மன் அருள் செய்வதால் அதுவே மருவி அலகுமலை என பெயர் வந்தது.
மலையின் அடிவாரத்தில் மயில் மண்டபம். அதனை அடுத்து செல்லும் வழியில் பாத விநாயகர், இடும்பன், குழந்தை வேலவர், சிவபெருமானை பூஜிக்கும் அனுமன் சன்னதிகள் உள்ளன. மலைப்பாதையில் நடந்தவாறே ஆறுபடை முருகப்பெருமான் சன்னதி, அலகுமலை முத்துக்குமரனையும் ஒரே இடத்தில் இருந்து தரிசனம் செய்யலாம் இதுவே இம்மலைக்குரிய சிறப்பு. மலைக்கோயில் மகாமண்டபத்தில் விநாயகர், வீரபாகு தேவர், வள்ளி, தெய்வானை அருள்பாலிக்கின்றனர்.
இவர்களுக்கு நடுவே கருவறையில் 'முத்துக்குமார பால தண்டாயுதபாணி எனும் பெயர் தாங்கி கருணை ததும்பும் முகத்துடன் கையில் தண்டாயுதம் ஏந்தி சற்குருவாகவும், தர்மராஜாவாகவும் அருள் செய்கிறார். அவரை தரிசித்தோரின் வாழ்வினை வளமுடையதாக ஆக்கும் வள்ளலாக உள்ளார்.
இக்கோயிலுக்கு நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர் என அலகுமலை அடிவாரத்திலுள்ள கைலாச நாதர் கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன. இயற்கை அழகுடைய இம்மலையில் பக்தர்கள் செல்ல ஒற்றையடிப்பாதையும், மலைக்கோயில் வரை வாகனங்கள் செல்வதற்கும் பாதை உள்ளன.
திருமணம், குழந்தைபேறு, தொழில் வியாபாரம் போன்ற வேண்டுதல்களுக்கு முருகனுக்குரிய தினங்களில் விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தல விருட்சம் வில்வ மரம்.
எப்படி செல்வது: திருப்பூரில் இருந்து காங்கேயம் வழியாக 21 கி.மீ.,
விசேஷ நாள்: வைகாசி விசாகம் ஐப்பசி கந்தசஷ்டி, தைப்பூசம் பங்குனி உத்திரம்
நேரம்: காலை 6:30 - 1:30 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98430 63645, 80720 79791
அருகிலுள்ள தலம்: வலுப்பூரம்மன் கோயில் 2 கி.மீ., (வலிப்பு நோய் நீங்கும்)
நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98429 39034