
வருங்காலம் சுகமாக அமைய இன்று முதல் வாழ்வில் மாறுங்கள். நல்ல மாற்றம் காணுங்கள்.
1. பத்து நிமிடம் முன்னதாக...
காலை 6:00 மணிக்கு எழுபவரா நீங்கள்? நாளை முதல் பத்து நிமிடம் முன்னதாக 5.50 மணிக்கு எழுந்திருங்கள். கூடுதலாகக் கிடைக்கும் பத்து நிமிடத்தில் அமைதியான காலையில் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் திறப்பதை உணர்வீர்கள்.
2. பத்து நிமிடம் மவுனம்
நீங்கள் தியானம் செய்யாதவராக இருந்தால் விரைவில் தியானம் செய்யப் பழகுங்கள். அதுவரை ஒவ்வொரு நாளும் பத்து நிமிடமாவது மவுனமாக இருங்கள்.
3. 45 நிமிட உடற்பயிற்சி
தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாசனம் ஏதாவது ஒன்றில் ஈடுபடுங்கள். உடல்நலனுக்காக ஒதுக்கும் நேரம் என்பது புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.
4. உணவில் ஒழுங்கு
பணிச்சுமையைக் காரணம் காட்டி சாப்பிடுவதை தாமதப்படுத்தாதீர். இந்த பழக்கம் உடலியக்கத்துக்குள் பிரச்னையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப எளிதில் ஜீரணமாகும் உணவுகளைச் சாப்பிடுங்கள்.
5. முதல் நாளே எழுதுங்கள்
உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி இருக்க மறுநாளின் டைரியை முதல்நாளே எழுதுங்கள். எதிர்பார்ப்பு நிறைவேற இந்த பழக்கம் உதவும்.
6. குப்பையை அகற்றுங்கள்
குப்பை, குவிந்து கிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கி விடும். அத்தகைய இடங்களில் செயலாற்றல் துாங்கி விடும். அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.
7. மனிதர்களை நெருங்குங்கள்
காரணத்துடனோ, காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும் போது உடலிலுள்ள சுரப்பிகள் துாண்டப்பட்டு பதட்டம் அதிகரிக்கும். மனிதர்களை நிறை குறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். அனைவரையும் நேசிப்பது மற்றவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு மிகவும் நல்லது.
8. அடுத்து என்ன? இதுவே மந்திரம்
வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி உங்களால் நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். இதுவே வெற்றிக்கான மந்திரம்.
9. நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்
ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். ''இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்'' என்ற நம்பிக்கையுடன் அன்றைய பணிகளைத் தொடங்குங்கள்.
10. பணத்துக்கு வேலை கொடுங்கள்
உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்ளும் பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். அது தானாகவே பெருகும்.
11. விழிப்புடன் இருங்கள்
கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள். உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கட்டும். வீண் அரட்டை, அவதுாறு, வாக்குவாதம் என அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.
12. நகைச்சுவை உணர்வு வேண்டும்
இறுக்கமாய் இருப்பதால் எதையும் சாதிக்க முடியாது. மன இறுக்கம், மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர! வெற்றியாளர்களும் வரலாறு நாயகர்களும் நகைச்சுவை நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நகைச்சுவை உணர்வு, வாழ்வின் பூட்டப்பட்ட பல கதவுகளைத் திறந்து விடும்.
13. வாழ்க்கையை கொண்டாடுங்கள்
மனிதநேயமே கடவுள் தன்மையின் ஆரம்பம். மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்து கொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், குற்றங்களை மன்னிப்பதும் நமக்கு பகுதிநேர வேலை. கடவுளுக்கோ முழுநேர வேலை. மகிழ்சியுடன் வாழ்க்கை என்ற கொண்டாட்டத்தில் பங்கெடுங்கள்