ADDED : ஏப் 24, 2021 01:47 PM

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேதாத்ரி நரசிம்மர் கோயிலில் ஐந்து நரசிம்மர்கள் உள்ளனர். இங்கு குழந்தைப்பேறுக்காக நடத்தும் உய்யால வழிபாடு சிறப்பானது.
சோமாக்சுரன் என்பவன் பிரம்மாவிடம் வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் மறைந்தான். இதனால் பிரம்மா முறையிட, பெருமாள் மச்சாவதாரம் எடுத்து அசுரனை அழித்து வேதங்களை மீட்டார். வேதங்கள் மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன. தாங்கள் இருக்கும் இடத்தில் பெருமாளும் தங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தன. அப்போது தன்னால் தங்க இயலாது என்றும், ஹிரண்யாசுரனை வதம் செய்த பின் இத்தலத்திற்கு வருவதாக அவர் உறுதியளித்தார். கிருஷ்ணவேணி நதிக்கரையிலுள்ள சாளக்கிராம மலையில் வேதங்கள் தங்கின. நரசிம்மராக அவதரித்த பெருமாள் இரண்யவதம் முடித்த பின் வேதங்களுக்கு காட்சியளித்தார். அவரது உக்கிரம் அதிகமாக இருந்தது. அதனால் அவர் 'ஜ்வாலா நரசிம்மர்' எனப் பெயர் பெற்றார்.
வேதங்களை அழைத்துச் செல்ல வந்த பிரம்மா, கிருஷ்ணவேணி நதிக்கரையில் கிடைத்த நரசிம்ம சாளக்கிராம கல்லுடன் புறப்பட்டார். ஆனால் அந்த கல்லின் உக்கிரத்தை பிரம்மாவால் தாங்க முடியவில்லை. மீண்டும் அதனை கிருஷ்ணவேணி நதிக்கரையில் வைத்து விட்டுப் புறப்பட்டார். அவர் சாளக்கிராம நரசிம்மராக இங்கிருக்கிறார். பிற்காலத்தில் இங்கு வந்த ரிஷ்யசிருங்கர் உக்கிரத்தை தணிக்கும் விதத்தில் மகாலட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்து நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அவரே லட்சுமி நரசிம்மர் எனப் பெயர் பெற்றார். வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்த கருடாழ்வாரால் இங்கு வீரநரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ஜ்வாலா நரசிம்மர், சாளக்கிராம நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், வீர நரசிம்மர் ஆகியோருடன் மூலவரான யோகானந்த நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் இங்கு உள்ளனர். அடிவாரத்தில் இருந்து 285 படிகள் ஏறினால் புற்று வடிவில் சுயம்பு நரசிம்மரைத் தரிசிக்கலாம். அனுமனுக்கு சுதை சிற்பம் இங்குள்ளது.
குழந்தை இல்லாதவர்கள் 'உய்யால வழிபாடு' செய்வதாக வேண்டுகின்றனர். 'உய்யால' என்பதற்கு 'தொட்டில்' என்பது பொருள். குழந்தை பிறந்ததும் நரசிம்மர், செஞ்சு லட்சுமி தாயாரை தொட்டிலில் இட்டு தாலாட்டும் நிகழ்ச்சியை நன்றிக்கடனாக நடத்துகின்றனர்.
எப்படி செல்வது: விஜயவாடா - ஐதராபாத் ரோட்டில் 60 கி.மீ., துாரத்தில் சில்லுக்கல்லு. இங்கிருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 3:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 09848 - 275 169, 08678 - 284 899, 284 866
அருகிலுள்ள தலம்: விஜயவாடா கனகதுர்கா கோயில்(77 கி.மீ.,)
நேரம் : அதிகாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0866 - 242 3600