/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வள்ளியுடன் விநாயகர் அவளூர் அதிசயம்
/
வள்ளியுடன் விநாயகர் அவளூர் அதிசயம்
ADDED : செப் 17, 2012 10:29 AM

விநாயகர் பெரும்பாலும் தனித்தே இருப்பார். சில இடங்களில் வல்லபையுடன் காட்சி தருவார். ஆனால், முருகனின் மனைவியும் தனது மைத்துனியுமான வள்ளியுடன் உள்ள அரிய விநாயகரை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள அவளூர் கிராமத்தில் தரிசிக்கலாம்.
இங்கே ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய காமாட்சி அம்மன் சமேத சிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பாலாற்றை பார்த்தவண்ணம் அமைந்துள்ள கோயிலில் உள்ள விநாயகர் இரு பெண் தெய்வங்களுடன் வீற்றிருக்கிறார். ஒருவர் பார்வதியின் அம்சமாக கருதப்படும் வள்ளி. இன்னொருவர் வெள்ளம் தாங்கிய அம்மன்.
வெள்ளம் தாங்கிய அம்மன் பெயர்க்காரணம் சுவாரஸ்யமானது. ஆற்றில் மணல் அள்ளும் கொடூரம் நடக்காத அந்தக் காலத்தில், ஆறும், ஊரும் சமதளத்தில் இருந்தது. தண்ணீரும் ஆற்றில் வற்றாது ஒடிக்கொண்டிருந்தது. ஒரு முறை பெருவெள்ளம் வந்தது, மக்கள் பெரிதும் அச்சம் கொண்டனர். கோயிலின் விளிம்பு வரை வந்த வெள்ளம், அதன்பிறகு ஊருக்குள் வராமல் அப்படியே வடிந்து போனது, அன்று வரை இந்த அம்மனுக்கு என்ன பெயரோ தெரியாது. ஆனால், இந்த அம்மனால் தான் தாங்கள் பிழைத்தோம் எனக்கருதிய மக்கள், நன்றிக்கடனாக அம்பாளுக்கு வெள்ளம் தாங்கிய அம்மன் என்று பெயர் சூட்டினர். அதன் பின்னர் வள்ளி சிலை அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
தனக்கு முருகனைத் திருமணம் செய்து வைக்க உதவிய விநாயகரை இவள் தரிசித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். இந்த சந்நிதிக்கு வந்தால் பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பதுடன் மனபலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. சிங்கேஸ்வரர்,காமாட்சிஅம்பாளை ஒரே இடத்தில் இருந்து தரிசிக்கமுடியும். இந்தக் கோயில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன.
போன்:
99621 43347,94452 73301.
-எல்.முருகராஜ்