ADDED : பிப் 19, 2023 01:18 PM

ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறும்? என்று கேட்டால் பலரும் படிப்பு, திருமணம் என்று ஆளாளுக்கு பதில் சொல்வர்.
உண்மையில் இவை எதிலுமே வாழ்க்கை முழுமை அடைவதில்லை. திருமணமானவர்கள் தாய், தந்தை எனும் ஸ்தானத்தை பெறும்போது வாழ்க்கை முழுமை பெறுகிறது. என்னதான் பணம் இருந்தாலும் ஒரு மழலை விளையாடாத வீடு வெறுமையாகத்தானே இருக்கும். இதுபோன்ற சூழலில் உங்களது வீடு உள்ளதா? கவலை வேண்டாம். செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோயிலுக்கு வாருங்கள். உங்கள் வீடு ஆனந்தம் விளையாடும் வீடாக மாறும்.
'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்னும் பழமொழிக்கு ஏற்ப, இங்கும் மலை மீது அமர்ந்து உள்ளான் முருகன். மலை அடிவாரத்தில் விநாயகருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நாம் படியேற ஆரம்பிக்கலாம். அமைதியான இடத்தில் சிறுவனாக, அழகனாக, பேரழகனாக இருக்கிறான் முருகன். தன் புன்னகையாலேயே பேரருள் வழங்கும் அந்த குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றும். மரகதக்கல்லினால் ஆன இவர், பழநி தண்டாயுதபாணியை போலவே உள்ளார். இவருக்கு இருபுறத்தில் இரண்டு மயில்களும், நாகங்களும் பின்புறத்தில் மயில் தோகையும் அமைக்கப்பட்டுள்ளன. அவரை வலம் வந்து வணங்கியபின், பிரகாரத்தில் அமர்ந்தால் போதும். நம்மிடம் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம் எல்லாம் கரைந்துவிடும்.
சரி... இக்கோயில் உருவான விதத்தை பார்ப்போம். பல ஆண்டுக்கு முன் முத்துசுவாமி என்பவரது கனவில் தோன்றிய முருகன், இங்கு கோயில் எழுப்ப வேண்டும் என சொன்னார். அதன்படி அவரும் மலை உச்சியில் வேலாயுதத்தை நிறுவி, வழிபாடு செய்யத் தொடங்கினார். பின் அவரது அயராத உழைப்பினால் இக்கோயில் உருவானது. இங்கே இன்னொரு மகானை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர்தான் காஞ்சி மஹாபெரியவர். ஒருமுறை இவர் இங்கு வந்திருந்தபோதுதான், 'நடுபழநி' என்ற பெயரை இக்கோயிலுக்கு சூட்டினார். கோயிலுக்கு பின்புறம் 45 அடி உயரத்தில் மலேசியா பத்துமலை முருகனும் காட்சி அளிக்கிறார்.
எப்படி செல்வது
மேல்மருவத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 9 கி.மீ.,
விசஷே நாள்: வைகாசி விசாகம் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தைப்பூசம், பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 73971 71931, 94432 09267
அருகிலுள்ள தலம்: பெரும்பேர் கண்டிகை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் 13 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 99529 65215, 79048 05027, 82481 86761

