ADDED : மே 11, 2017 01:54 PM

கும்பகோணம் அருகிலுள்ள திருவேள்விக்குடியில் சிவன் மணவாளேஸ்வரர் என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார்.
விரைவில் கல்யாணயோகம் உண்டாக இங்கு மணக்கயிறு கட்டி வழிபடுகின்றனர்.
தல வரலாறு: பார்வதிதேவிக்கு மானிடப்பெண்ணாகப் பிறந்து சிவனை மணக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. சிவனை அவள் வேண்டினாள். இவ்வேளையில் புத்திர பாக்கியத்திற்காக பரத்வாஜ மகரிஷி நடத்திய யாகத்தில் அம்பிகையை தோன்றச் செய்தார் சிவன். பரத்வாஜர் அவளைத் தன் மகளாக ஏற்றார். அவளது திருமணம் நல்ல முறையில் நடக்க வேள்வி(யாகம்) ஒன்றைச் செய்தார். இதனால் இந்த தலத்திற்கு 'வேள்விக்குடி' என்ற பெயர் வந்தது. யாகத்தின் பலனாக, அம்பிகை சிவனைத் திருமணம் செய்து கொண்டாள். மணம் முடித்த சிவனுக்கு 'மணவாளேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
மங்களக்கயிறு: வீட்டில் திருமணத்தின் போது, மணமேடையில் முகூர்த்தக்கால் ஊன்றி, மணமக்களின் கையில் காப்பு அணிவிப்பர். திருமணம் முடியும் வரை மணமக்களை தீய சக்திகள் நெருங்காதிருக்க இவ்வாறு செய்வர். இதை போல சிவ-பார்வதி திருமணத்தில் மங்களக்காப்பு கட்டும் சடங்கு
இத்தலத்தில் நடந்தது. திருமண பாக்கியத்திற்காக வரும் பக்தர்களும் மங்களக்காப்பு கட்டிக் கொள்கிறார்கள். பவுர்ணமியில் திருமண தோஷ நிவர்த்திக்காக யாகம் நடக்கிறது. யாகத்தில் வைத்த தீர்த்தத்தால் சுவாமி, அம்பாள் பரிமள சுகந்த நாயகிக்கு அபிஷேகம் செய்யப்படும். இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கு அம்பிகைக்கு அணிவித்த மங்களக்கயிறும், பெண்களுக்கு சிவனுக்கு அணிவித்த கயிறும் தருகின்றனர். இதைக் கட்டிக் கொள்பவர்களுக்கு சிறந்த மணவாழ்வு அமையும். பவுர்ணமி யாக குண்ட சாம்பல், பிரசாதமாக தரப்படுகிறது.
சிறப்பம்சம்: அரசகுமாரன் ஒருவனுக்கு திருமண நிச்சயம் செய்தபின், பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால், பெண்ணின் உறவினர்கள் திருமணத்திற்கு மறுத்தனர். வருந்திய அரச குமாரன் சுவாமியை வணங்க, அவனுக்காக சிவன் பூதகணங்கள் மூலம் பெண்ணை வரவழைத்து, திருமணம் செய்து வைத்தார். இதன் அடிப்படையில் நிச்சயதார்த்தம் செய்த பின், திருமணத்தில் தடங்கல் ஏற்படுவதை தவிர்க்க மணமக்களின் பெற்றோர் இங்கு
வழிபடுகின்றனர்.
பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கோதண்டராமர், கஜலட்சுமி, காலபைரவர் உள்ளனர். நவக்கிரக சன்னதிக்குரிய இடத்தில் ஈசான லிங்கம் உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்த லிங்கத்தை வழிபடுகிறார்கள்.
எப்படி வழி?
கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் குத்தாலம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் திருவேள்விக்குடி.
நேரம்: காலை 7:00-12:00 மணி; மாலை 4:00- 7:00 மணி
அலை/தொலைபேசி: 99422 85411, 04364 - 235 462

