ADDED : மார் 30, 2018 04:03 PM

கேரள மாநிலம் மள்ளியூர் மகாகணபதி கோயிலில் கணபதியின் மடியில் கண்ணன் வீற்றிருக்கும் அதிசயம் காணலாம்.
தலவரலாறு
பல நுாற்றாண்டுக்கு முன், ஆர்யப்பள்ளி மனை, வடக்கேடம் மனை எனப்படும் இரு குடும்பத்தினரும் இணைந்து மேற்கூரை இல்லாமல் சிறிய சுற்றுச்சுவர் கட்டி நடுவில் கணபதியை வைத்து வழிபட்டனர். நாளடைவில், இந்த இரு குடும்பத்தினருக்கும் வறுமை உண்டாக, கோயில் பராமரிப்பு பாதிப்புக்குள்ளானது. பின், இவர்களது வம்சாவளியில் வந்த சங்கரன் நம்பூதிரி, குருவாயூர் கண்ணன் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். தினமும் கணபதி கோயிலில் அமர்ந்து கிருஷ்ணரின் பெருமையை பேசும் பாகவதம் படித்தார். பின்னாளில், கண்ணன் சிலை செய்து கணபதியின் மடியில் வைத்து வழிபட்டார். இக்கோயிலில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகாகாவலன், யட்சி, நாகர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
சங்கீத வழிபாடு
புல்லாங்குழல் நாயகன் கண்ணனை மகிழ்விக்கும் விதத்தில், சபரிமலை மகரவிளக்கு காலத்தில் சங்கீத வழிபாடு நடக்கிறது. புதிய பாடகர்கள் தங்களின் அரங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தி அருள் பெறுகின்றனர்.
பரிகார பூஜைகள்
முக்குறி என்னும் செடிகளை 108 எண்ணிக்கையில் வேருடன் பறித்து, வாசனை திரவியத்தில் ஊற வைத்து வழிபாடு செய்வர். இதற்கு 'முக்குறி புஷ்பாஞ்சலி' என்று பெயர்.இதை செய்தால் கிரகதோஷம் நீங்கும்.
தினமும் ஐந்து முறை இந்த வழிபாடு நடக்கிறது. இது தவிர, கடும் நோயிலிருந்து விடுபட 'தடி (பச்சரிசி மாவு) நைவேத்யம்' என்னும் வழிபாடு நடக்கிறது. திருமணத்தடை நீங்க செவ்வாய், வெள்ளியன்று சுவாமிக்கு அணிவிக்கப்படும் 'பழமாலை' சக்தி வாய்ந்ததாகும். குழந்தை பாக்கியம் பெற பால் பாயாசம் படைத்தும், பிதுர்கடன் நிறைவேற்ற, 'சதுர்த்தியூட்டு'வழிபாடும் (சோறு, காய்கறி படையல்) செய்கின்றனர். இந்த வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை கோயிலில் மட்டுமே வாங்க வேண்டும்.
செல்வது எப்படி
கோட்டயம் - எர்ணாகுளம் சாலையில் 21கி.மீ.,யில் குறுப்பந்துறை. அங்கிருந்து 2 கி.மீ.,யில் மள்ளியூர்
விசேஷ நாட்கள்
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி
நேரம்
காலை 5:00 - 12:30 மணி
மாலை 5:00 - 08:00 மணி
தொடர்புக்கு
04829 - 243 455, 94471 14345
அருகிலுள்ள தலம்
24 கி.மீ.,யில் கோட்டயம் சனீஸ்வரர் கோயில்