ADDED : ஏப் 29, 2014 01:49 PM

அட்சய திரிதியை அன்று வணங்க வேண்டிய லட்சுமி குபேர கோயில் சென்னை ரத்தின மங்கலத்தில் உள்ளது. இவரை வணங்கினால் செல்வவளம் பெருகும்.
தல வரலாறு : பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும், திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இவரது மகன் குபேரன். இவரது மாற்றாந் தாய்க்கு பிறந்தவனே ராவணன். முதலில் இலங்கை அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றி விட்டான். குபேரனின் விமானம் எங்கு பறந்து சென்றாலும், தங்கம், முத்து ஆகியவற்றை சிந்திக் கொண்டே செல்லும். குபேரனை, ராவணன் இலங்கையில் இருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே அவன் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. நாட்டை இழந்த குபேரன், கடுந்தவம் புரிந்து சிவபெருமானை வழிபட்டார்.
அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதி தேவியோடு காட்சி தந்தார். அவனது தவத்தை மெச்சி, அஷ்டதிக்கு பாலகர்களில் வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்தார். லட்சுமி தேவி, குபேரனை தனதானிய அதிபதியாக்கினாள்.
தேவியுடன் குபேரன்: கருவறையில் மூலவராக சிரித்த முகத்துடன் இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் காட்சி தருகிறார். திருப்பதி செல்லும் முன் ரத்னமங்கலம் லட்சுமி குபேரரை வழிபடுவது நல்லது. பவுர்ணமி, அமாவாசை நாளில் வழிபடுவதும் சிறப்பு. பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோகஆஞ்சநேயர், நவக்கிரகம் சந்நிதிகள் உள்ளன.
மந்திரம் சொல்லுங்க:
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே
தேஹி தபாய ஸ்வாஹ!
என்னும் மந்திரத்தை, அட்சய திரிதியை அன்று வீட்டில் சொல்வதால் லட்சுமி குபேரர் அருள் கிடைக்கும். அட்சய திரிதியை, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும்.
இருப்பிடம்: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் ரத்ன மங்கலம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து பஸ் உண்டு.
திறக்கும் நேரம்: காலை 5.30- 12.00, மாலை 4.00- 8.00.
போன்: 94440 20084.
