
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் மிகச்சிறந்த தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயிலுக்கு, வரும் 7ம் தேதி நிகழும் மகாளய அமாவாசையை ஒட்டி சென்று வரலாம். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
தல வரலாறு: ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டார். அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தார். சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தார். தன் மரணத்துக்குப் பிறகு, தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டி உயிர் விட்டார். அதன்படி, ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார் ராமன். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார்
வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இங்கு தாயார் மரகதவல்லியின் சன்னதி பெருமாளுக்கு இடதுபுறமும், பூதேவியின் அம்சமான ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின்படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தால் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்குள்ள தீர்த்தம் 'ஜடாயு புஷ்கரணி' என அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம்: 'திரு' என்றால் மரியாதை. 'புள்' என்றால் பறவை(ஜடாயு). 'குழி' என்றால் 'ஈமக்கிரியை செய்தல்'. ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.
சிறப்பம்சம் : மூலவர் விஜயராகவப்பெருமாள், தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஈமக்கிரியை செய்த தலமாதலால், கோயில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளன. மூலவரின் மேல் உள்ள விமானம், விஜய வீர கோட்டி விமானம் எனப்படுகிறது.
தலப்பெருமை: இங்குள்ள தாயாருக்கு 'வறுத்தபயறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார்' என்ற சிறப்பு பெயருண்டு. இவளை வணங்கினால் பலன் உறுதி என்பதால் இவ்வாறு சொல்வர். திருந்தாதவர்களும் இவள் பார்வைபட்டால் திருந்தி விடுவார்களாம். அது மட்டுமல்ல! குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை தங்கள் மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ராமானுஜரின் குருவான யாதவப்பிரகாசர் இவ்வூரில் தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயம். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டார். இவரது உறுதிக்கும், பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் எட்டாம் நாளன்று அந்த சிற்பியின் பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார். ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால்,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்பவர்கள், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இருப்பிடம்: சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ., தொலைவில், உள்ள பாலுரெட்டிசத்திரத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.
திறக்கும் நேரம் : காலை 7-12 மணி, மாலை 4- இரவு 7 மணி.
போன்: 044-2724 6501.