ADDED : மார் 04, 2014 02:14 PM
திருமண யோகம் தரும் ஸ்ரீநிவாசப் பெருமாள், திருச்செந்தூர் அருகிலுள்ள புன்னைநகரில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை புதன், வெள்ளியன்று தரிசிப்பது சிறப்பு.
தல வரலாறு: பசுக்கள் மேயும் புன்னை வனமாக இருந்ததால் இத்தலம், 'புன்னையடி' என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஸ்ரீரங்கம் கோயிலின் தல விருட்சம் புன்னை மரமே. பெருமாள் கோயில்
திருவிழாவில், 9ம் நாளன்று சுவாமி புன்னைமர வாகனத்தில் எழுந்தருள்வது வழக்கம். அதன் அடிப்படையில் இப்பகுதியிலும் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. வாரியார் சுவாமியின் ஆசியுடன் கட்டப்பட்ட இக்கோயிலில், தினமும் சூரியக் கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு, அவரை வணங்குவது போல் அமைந்திருப்பது சிறப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில், சோலை நடுவே அழகாக அமைந்துள்ளது. இங்கிருந்த பழமையான ஆதிநாராயணப் பெருமாள் கோயிலையும் புதுப்பித்து கட்டியுள்ளனர் .
கோயில் அமைப்பு: ராஜகோபுரம், உற்சவ மண்டபம், பிரகார மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப கிரகம் என 23ஆயிரம் சதுரடி பரப்பில், மயனின் சாஸ்திரப்படி 22 மாதத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கோயிலில், ராஜ கணபதி முதலில் தரிசனம் தருகிறார். மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் காட்சி தருகின்றனர். கர்ப்ப கிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரைப் பார்த்தால், திருப்பதி பெருமாளை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் உற்சவ மூர்த்தியாக அர்த்த மண்டபத்தில் இருக்கிறார். தாயார் பத்மாவதியும், ஆண்டாளும் தனி சந்நிதியில் உள்ளனர்.வெளிப்பிரகாரத்தில் ஆண்டாள், கணபதி, தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றனர். பெருமாளை நோக்கி கருடாழ்வார் நிற்கிறார். வடபழநி முருகன், ராஜகோபாலர், வள்ளி தெய்வானையுடன் தணிகை முருகன், வாரியார் சுவாமி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
தடை நீக்கும் திருமஞ்சனம்: பெருமாளுக்கு வெள்ளியன்றும், உற்சவருக்கு புதனன்றும் திருமஞ்சனம் என்னும் அபிஷேகம் நடக்கிறது. இவரை இந்நாட்களில் தரிசித்தால், தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். வியாழனன்று நடக்கும் பெருமாளின் ஏகாதந்த சேவையைத் தரிசிக்க கிரக தோஷம் விலகும். பெருமாள் கோயிலுக்கு அருகில் நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள வாதமுடக்கி மரத்தடியில் தீபமேற்றி வழிபட நோய் தீரும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை உள்ளிட்ட நவதிருப்பதிகளும் (ஒன்பது பெருமாள் கோயில்கள்), திருச்செந்தூரும் இத்தலம் அருகில் அமைந்துள்ளன.
கிராம தேவதைகள்: அருகிலுள்ள புதுப்பிக்கப்பட்ட கோயிலில் மூலவராக ஆதிநாரயணர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் தனி சந்நிதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோரும், பிரகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளை அம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர்.
திருவிழா: வைகுண்ட ஏகாதசி, பொங்கலுக்கு மறுநாள் பரிவேட்டை, புரட்டாசி சனி
இருப்பிடம் : திருநெல்வேலி- திருச்செந்தூர் வழியில் குரும்பூர் (45 கி.மீ). அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ தூரத்தில் புன்னைநகர். இங்கிருந்து திருச்செந்தூர் 20 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7.00 - இரவு 8.00.
போன்: 94443 96993, 93829 06220, 04639- 278 055, 279 077.

