ADDED : மார் 31, 2017 01:54 PM

ஹேவிளம்பி ஆண்டுக்குரிய ராஜா, புதன். இவரை வழிபட்டால் கல்வி வளம் சிறக்கும். நரம்பு நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருவெண்காட்டில் அருள்கிறார்.
தல வரலாறு : பிரம்மாவிடம் பெற்ற வரத்தை துஷ்பிரயோகம் செய்த மருத்துவன் என்னும் அசுரன், தேவர்களுக்கு துன்பம் விளைவித்தான். எனவே தேவர்கள் மாறுவேடத்தில் தப்பி, பூலோகம் வந்து விட்டனர். அங்கு வந்தும் அசுரன் அவர்களை துன்புறுத்தினான். சிவனை நோக்கி தவம் இருந்து
சூலாயுதம் பெற்று, நந்தீஸ்வரரை காயப்படுத்தினான். தனது பாதுகாவலருக்கு ஏற்பட்ட அவலம் அறிந்த சிவன், தன்னிலிருந்து அகோர மூர்த்தி என்ற சக்தியை தோற்றுவித்தார். அசுரன் அவரிடம் சரணடைந்தான். சிவன் அசுரனுக்கு முக்தியளித்த தலம் திருவெண்காடு. இங்கு பிரம்ம வித்யாம்பிகையுடன், சுவேதாரண்யேஸ்வரர் என்ற பெயரில் சிவன் காட்சியளிக்கிறார், புதன் பகவான்: கிரகங்களில் ஆண், பெண், திருநங்கை தன்மை கொண்ட கிரகங்கள் உண்டு. இவர்களில் புதன், திருநங்கை கிரகம். அலி தோஷம் நீங்க அவர் திருவெண்காடு வந்து தவம் செய்தார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அவரை நவக்கிரகங்களில் ஒருவராக நியமித்ததுடன், ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆக்கினார். கல்விக்கு புதன் அதிபதி. நரம்பு மண்டலத்தின் நாயகனும் இவரே. கல்வி மேன்மையடையவும், நரம்பு சார்ந்த நோய்கள் நீங்கவும் பச்சை வஸ்திரம் சாத்தி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்த சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். ஒருவரது ஆயுளில் புதன் திசை 17 ஆண்டுகள் வரும். எனவே 17 தீபம் ஏற்றி 17 முறை வலம் வந்து வழிபட்டால் புதன் திசை, புதன் புத்தி காலங்களில் மிகுந்த நன்மை நடக்கும்.
இருப்பிடம்: சீர்காழி - பூம்புகார் சாலையில் 14 கி.மீ., துாரத்தில் திருவெண்காடு உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மீ.,
தொலைபேசி: 04364 - 256 424

