
சர்க்கரை பொங்கலுடன் ஸ்பெஷலாக சாப்பிடும் விதத்தில் கும்மாயம், அவல் பாயசம், வெள்ளை பணியாரம், பால் கொழுக்கட்டை, கதம்ப வடை ஆகியவை தயாரிக்கும் முறை இங்கு இடம் பெற்றுள்ளது.
கும்மாயம்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 250 கி
பச்சரிசி - 50 கி
வெல்லம்-250 கி
நெய் - 50 கி
செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, அதனுடன் அரிசியையும் சேர்த்து நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவைப் போல மூன்று மடங்கு தண்ணீர் எடுத்து, அதில் வெல்லத்தை துாள் செய்து கரைத்து வடிகட்டி கொள்ளவும். வடித்த வெல்லத் தண்ணீரில் மாவை சேர்த்து கரைத்து, அடுப்பில் மிதமான நெருப்பில் சூடாக்கவும். கட்டி படாமல் அவ்வப்போது கிளற, மெழுகு பதம் வந்ததும் இறக்கவும். விரலைத் தண்ணீரில் நனைத்து வெந்த மாவைத் தொட்டால் விரலில் ஒட்டக் கூடாது. சூட்டோடு வெந்த மாவை, கரண்டியில் எடுத்து அதன் மீது நெய் விட்டு சாப்பிட வேண்டும்.
அவல் பாயசம்
தேவையான பொருட்கள்
கெட்டி அவல் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பசும்பால் - 1½ லி
ஏலப்பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 10
திராட்சை - 10
செய்முறை
நன்றாக தண்ணீரில் கழுவிய, கெட்டி அவலை உலர்த்திக் கொள்ளவும். நெய்யில் லேசாக வறுத்து, தண்ணீர் தெளித்து குழைய வேக வைக்கவும்.
அதனுடன் சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும். பசும்பாலை சுண்டக் காய்ச்சி, வேக வைத்த அவலுடன் சூடாக கலக்கவும். ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும். இன்னும் சுவையாக இருக்க விரும்பினால் 'கன்டென்ஸ்ட் மில்க்' சேர்த்தும் செய்யலாம்.
வெள்ளை பணியாரம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 500 கி
உளுந்தம்பருப்பு - 50 கி
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 250 கி
செய்முறை: அரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் ஏற்றி, மிதமாக சூடாக்கவும். ஏந்தல் கரண்டியில் (குழி கரண்டி வேண்டாம்) மாவை எடுத்து ஊற்றவும். பணியாரம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி விட்டு உடனே எடுக்கவும்.
பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 250 கி
வெல்லம் - 200கி
தேங்காய் - அரை மூடி
உப்பு - 1/4 ஸ்பூன்
செய்முறை: அரிசியைக் களைந்து, ஊற வைத்து, உருட்டக் கூடிய பதத்திற்கு கெட்டியாக உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை இரண்டு அங்குல நீளத்திற்கு உருண்டையாக உருட்டி, தட்டில் உலர வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டவும். நான்கு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் காய வைக்கவும். நன்றாக கொதித்ததும், உருட்டிய கொழுக்கட்டையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மெதுவாக கிளறி விடவும். கொழுக்கட்டை முழுவதும் வெந்ததும், வெல்லக் கரைசலை சேர்த்து கிளறவும். கடைசியாக தேங்காய்த் துருவலை சேர்த்து கிளற சூடான பால் கொழுக்கட்டை தயாராகி விடும்.
கதம்ப வடை
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 200 கி
கடலைப்பருப்பு - 100 கி
உளுந்தம் பருப்பு - 50 கி
பச்சரிசி - 50 கி
மிளகாய் வத்தல் - 7
உப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 500 கி
செய்முறை: துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, அரிசியை தண்ணீரில் களைந்து ஊற வைக்கவும். ஊறியதும், உப்பு, மிளகாய் சேர்த்து வடை தட்டும் பக்குவத்தில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்புத்தீயில் காய வைக்கவும். சிறிதளவு மாவை, கையில் எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுக்க, சுவையான கதம்ப வடை தயாராகி விடும்.