ADDED : ஜன 13, 2017 10:47 AM

சூரியன் வழிபட்ட சிவன் திருவையாற்றில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் கைலாய மலையை தரிசித்த புண்ணியம் உண்டாகும்.
தலவரலாறு: சிலாத முனிவருக்கு மகனாக அவதரித்தவர் நந்திகேஸ்வரர். முனிவர் தன் மகன் குழந்தையாக இருந்த போதே சிவன் பொறுப்பில் விட்டுச் சென்றார். இறைவன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ததால் இத்தல திருவையாறு என்றும், சிவனுக்கு ஐயாறப்பர் என்றும் பெயர் வந்தது. சிவனருளால் வளர்ந்த நந்திகேஸ்வரர், கைலாய பரம்பரையை உருவாக்கினார். தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் இதைச் சேர்ந்தவை.
கைலாய புண்ணியம்: இங்குள்ள அம்பிகை அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். உயிர்களுக்கு படியளக்கும் இவள் தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் வீற்றிருக்கிறாள். விஷ்ணுவின் அம்சமான இவள் சக்தி மிக்கவளாக கருதப்படுகிறாள்.
கருவறையின் உள் பிரகாரத்தைச் சுற்றக் கூடாது என்னும் விதி இங்குள்ளது. சுயம்பு மூர்த்தியான சிவனின் ஜடாமுடி, கருவறையின் பின்புறம் விரிந்து கிடப்பதால், அதை மிதிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். சூரியன் வழிபட்ட தலமான இங்குள்ள குளம் சூரிய புஷ்கரணி எனப்படுகிறது. நம்பியவரைக் காக்கும் ஐயாறப்பர், திருநாவுக்கரசருக்கு கைலாய காட்சியை இத்தலத்தில் வழங்கினார்.
இங்கு வழிபட்டவர்கள் கைலாய மலையைத் தரிசித்த புண்ணியம் பெறுவர் என்பது ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய நாவுக்கரசர், இங்குள்ள புனிதமான சூரிய புஷ்கரணியில் இருந்து எழுந்து வந்தார். வெளி பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 'ஐயாறப்பா' என உரக்க கத்தினால் அது ஏழு முறை எதிரொலிப்பது அதிசயம் மிக்கதாகும்.
அர்ச்சகர் சிவன்: இக்கோவில் அர்ச்சகர் ஒருமுறை காசிக்கு சென்று விட்டார். அவர் திரும்பி வருவதாகச் சொன்ன நாளில் அவரால் வரமுடியவில்லை. இதையறிந்த அரசன் உடனடியாக கோவிலுக்கு நேரில் வந்தான். ஆனால் அங்கே சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்வதைக் கண்டு, அர்ச்சகர் வந்து விட்டாரே என்று திரும்பிப் போய் விட்டான். மறுநாள் தான் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊருக்கு வந்தார். அவரைக் கண்ட மக்களும், அரசனும் சந்தேகத்தால் விசாரித்தனர். அர்ச்சகர் மன்னனிடம். ''இப்போது தான் திரும்ப முடிந்தது, மன்னிக்க வேண்டும்,'' என்றார். ஆனால், முதல்நாள் தானே கோவிலில் இருந்து பூஜை செய்ததை அறிந்த அவர், தனக்குப் பதிலாக ஐயாறப்பரே தன் வடிவில் வந்து, தனக்குத் தானே அபிஷேகம் செய்த விஷயம் தெரிய வந்தது. இப்படிப்பட்ட அதிசயம் நடந்த தலம் இது.
சிறப்பம்சம்: பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். திருமால் இவரை வழிபட்டதால் இவர் 'ஹரி உரு சிவயோக தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். ஆமையை மிதித்த நிலையில் காட்சி தருகிறார்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ.
நேரம் : காலை 6:00 - 11:00, மாலை 4:00 - இரவு 8:30 மணி
அலை/தொலைபேசி: 94430 08104; 04362 - 260 332.

