/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
புரிந்து கொள் தம்பி! இது தான் உலகம்!
/
புரிந்து கொள் தம்பி! இது தான் உலகம்!
ADDED : மார் 05, 2021 05:24 PM

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்களைப் பற்றி கவலைப்படாதே.
எதை செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவர்கள் இருப்பார்கள். அதை பெரிதுபடுத்தாதே.
லட்சியத்தை நோக்கி பயணம் செய்.
ஒவ்வொரு மனிதனும்
தனித்தனி பிறவிகள்;
தனித்தனி ஆன்மாக்கள்.
அவர்களுக்கென தனித்தனி ஆசைகள், பண்புகள், விருப்பு, வெறுப்புகள் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணம் இருக்கும். அவர்களைத் திருத்துகிறேன் என்று வேதனையை சுமக்காதே. அவர்களின் மனம் போல போகட்டும். அனுபவம் பெற்ற பின் அவர்கள் திரும்பி வருவார்கள்.
அதுவரை பொறுமையாக இரு. போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்கள் உணர்ந்தால்தான் உண்மை புரியும். முன்கூட்டி சொல்வதால் அவர்களுக்கு உன்னை பிடிக்காது.
இது வாழ்வின் யதார்த்தம். பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில் தான் ஒருவரின் குணங்களும், செயல்களும் இருக்கும். இது எல்லோருக்கும் பொருந்தும்.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வது தானே அவர்களின் விதி. இதை மாற்றி அமைக்க உன்னால் முடியுமா?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! '
பாசத்துடன் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன்' என்று கெட்ட பெயரை சம்பாதிக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு. அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்ள விதி இருந்தால் அவர்கள் திருத்திக் கொள்வார்கள். அதுவரை பொறுமையுடன் இரு.
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பு காட்டினாலும், 'தான் யார்? தன் குணம் என்ன?' என்பதை ஒருநாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்.
வந்து போகும் உலகத்தில் நாம் பிறந்திருக்கிறோம். என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். 'எல்லையில்லா அன்பு வைத்திருந்தேன். என்னை ஏமாற்றி விட்டனர்' என புலம்பாதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறார் கடவுள்.
அதையும் மீறி சில நேரத்தில் கடல்நீர் உள்வாங்குகிறது; எல்லையை தாண்டி விடுகிறது. அது போல் மனிதனின் இயற்கையான சுபாவம் சில நேரத்தில் தானாகவே வெளிப்பட்டு விடும். நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாயோ அப்படி வாழப் பழகு. அதில் நன்மை, தீமை எது வந்தாலும் உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். அதன் மூலம் உன்னைத் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமோ, துன்பமோ வருவதை சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு துணையைத் தேடாதே. உன் இன்ப துன்பத்தில் பங்கேற்க இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிராப்தத்தை பொறுத்தது. அப்படி அது நடந்தால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் வரும் துன்பத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை உருவாக்கு. மனிதன் மீதுள்ள நம்பிக்கையை விட, கடவுளின் மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்து.
கண்ணீரும், கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும். அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீ தான் சுமையை சுமந்தாக வேண்டும். அழுகையுடன் சுமப்பதை விட இருப்பதை ஏற்றுக் கொண்டு சுமப்பது நல்லது. தைரியம், தன்னம்பிக்கை நம்மை வாழ வைக்கும். இந்த பக்குவம் வந்து விட்டால் எந்த துன்பமும் நெருங்காது.