ADDED : டிச 13, 2024 08:43 AM

மார்கழி மாதம் வந்ததும் வாசலில் பெரிய கோலமிட்டு, வண்ணப் பொடி துாவி, பூசணிப்பூவால் அழகுபடுத்துவர். இதற்கு காரணம் மாதங்களில் மார்கழிதான் அழகு. பகவான் கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி' என அதனால்தான் கூறியுள்ளரோ... என்னவோ!
கன்னிப் பெண்களோ நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்பார்கள். இந்த நோன்பை அறிமுகப்படுத்தியவள் ஆண்டாள். ஆழ்வார்களில் ஒரே பெண்ணான இவள் இந்த நோன்பு இருந்துதான் பகவான் கிருஷ்ணரை அடையும் பேறு பெற்றாள்.
அதைப்போல் சிவனடியாரான மாணிக்கவாசகரும் திருவெம்பாவை பாடியுள்ளார். அவர் தன்னை ஒரு பெண்ணாக கருதி சிவபெருமான் மீது பாடிய பாடலே திருவெம்பாவை. இதில் பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு, நீராடிவிட்டு சிவனை வணங்குவதாக பாடியிருப்பார். இவற்றை பாடியபடி மார்கழியில் வீதிகளில் பக்தர்கள் வலம் வருவர். கோயில்களிலோ அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பூஜை ஆரம்பித்துவிடும். பஜனை, நாமசங்கீர்த்தனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். எதற்காக இப்படி அதிகாலையிலேயே இவை நடக்கிறது?
மார்கழியில் ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு அருகில் வருவதால் அதை சுவாசிப்பவருக்கு உடல்நலம் சிறக்கும். இதற்காக இந்த நடைமுறையை பின்பற்றினர். பெண்கள் பூசணிப்பூ வைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.
அந்த காலத்தில் வரன் தேடுவதற்கு மேட்ரிமோனியல் டாட் காம் வசதி இல்லை. அதற்கு தரகர்களும் கிடையாது. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் உள்ள வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு அதில் பூசணிப்பூ இருக்கும். பக்தர்கள் பஜனை பாடி வரும் போது அந்த பூவைப் பார்த்ததும் மணமகள் இருப்பதை தெரிந்து கொள்வர்.
தை பிறந்ததும் அந்த வீட்டிற்குச் சென்று திருமணப் பேச்சை தொடங்குவர்.
அதைப்போல் நமக்கு ஒரு வருட காலம் என்பது, தேவர்கள் வாழும் உலகின் ஒரு நாள் ஆகும். அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் அதிகாலை பொழுதாகும். இந்த காலத்தில் வழிபாடு, தியானம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.