
எங்கள் குடும்பத்திற்கு நாகதோஷம் உள்ளது. எந்தச் செயலைத் தொடங்கினாலும் தடைகள் ஏற்படுகிறது எனக் கவலைபடுகிறீர்களா... உடனடியாக தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் குடியிருக்கும் கோமதியம்மனை சரணடையுங்கள்.
'கோமதி' என ஒருதரம் உள்ளம் உருக அழைத்தால் போதும் நொடிக்குள் உங்கள் குறைகளை தீர்ப்பாள். ஏனென்றால் சங்கன், பதுமன் என்னும் நாக அரசர்கள் இங்கு வழிபட்டு சங்கர நாராயணரை தரிசிக்கும் பேறு பெற்றனர். துாய சிந்தனையுடன் இத்தலத்தை நினைத்தாலும் நாகதோஷம் அகலும்.
இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊற்றுமலை ஜமீனிடம் புலவராக இருந்தவர் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயர். சீவல மாற பாண்டிய மன்னரால் இயற்றப்பட்டு முழுமை பெறாமல் இருந்த கோயில் புராணத்தை நிறைவு செய்தவர் இவரே. கோமதியம்மனை தரிசிக்கும் பேறு பெற்ற பின் 'எந்த மனிதரையும் பார்க்க மாட்டேன்' என வரம் பெற்றார். அதன் பின் கண் இமைகள் வளர்ந்து கண்களை மூடி விட்டன. இவரால் பாடப்பட்ட 'கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்' பாடலை தினமும் பாடுவோருக்கு விருப்பம் நிறைவேறும்.
சருவ லோகத்தையும் தங்கியரா உலகு
தன்னில் வளர் சங்கபத்மர்
சைவமும் வைணமும் ஓர்ந்து இருவர் தங்களில்
சமைய வாதம் புகன்று
மருமலர்க் கற்பகத்திறை உலகினில் சென்று
மன்னு விடை உரைக்க
மற்றவர்க்கு அரியரனும் ஒன்று எனத்தெளிவிலா
வன்மையை உணர்ந்து நீவிர்
உரிமையுடன் வரராசையுற்று நற்றவம்
உஞற்றிடில் இருவுருவும் ஒன்றா
உங்களுக்கு அறியலாம் என்றபடி அவர் தவசு
உகந்து செய ஒரு வடிவமாய்த்
திருவுருவு காட்டியவர் மருவிய பராசக்தி
செங்கீரை ஆடியருளே
தேன் மொய்த்த புன்னையங்காவில்
பசுங்கிள்ளை செங்கீரை ஆடியருளே.