ADDED : மார் 25, 2022 11:29 AM
''மனிதனின் ஆயுள் நுாறாண்டு என்பர். எனினும் நுாறு வயதைக் கடந்தவர்கள் அதிகமில்லையே ஏன்'' எனக் கேட்டார் திருதராஷ்டிரர்.
அவரது சகோதரரான விதுரர், 'மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. இதிலிருந்து தப்பித்தால் மட்டுமே வாழ்வு நீடிக்கும்' என்று சொல்லி விளக்கினார்.
முதல் வாள்: கர்வம். மனிதர்களில் பலர், 'நானே கெட்டிக்காரன். மற்றவர் எல்லாம் முட்டாள்' என கருதுகின்றனர். தன்னிடமுள்ள குறைகள், பிறரிடம் உள்ள நிறைகள் காண்பவருக்கு மட்டுமே கர்வம் உண்டாகாது.
இரண்டாவது வாள்: அதிகம் பேசுதல். பேச விஷயமே இல்லாத போதும் வீணாகப் பேசுபவன் வம்பை விலைக்கு வாங்குகிறான்.
மூன்றாவது வாள்: தியாக உணர்வு இன்மை. பேராசை தியாக உணர்வைத் தடுக்கிறது.
நான்காவது வாள்: கோபம். இதை வென்றவனே உண்மை யோகி. கோபத்தில் தர்மம் எது. அதர்மம் எது என்பது தெரியாது. விவேகம் இழந்து மனம் பாவத்தில் ஈடுபடும்.
ஐந்தாவது வாள்: சுயநலம். எல்லாத் தீமைக்கும் வேரான சுயநலம், பாவம் செய்யத் தயங்குவதில்லை.
ஆறாவது வாள்: துரோகம். நல்ல நண்பர்கள் நம்பிக்கையை கெடுக்கும் விதத்தில்
துரோகம் செய்வது தவறு. இந்த ஆறில் இருந்தும் விலகுபவன் நுாறாண்டு காலம் வாழ்வான்.

