ADDED : டிச 10, 2012 11:25 AM

ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார்.
பக்தர் ஒருவர் அவரிடம், ''ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?,'' என்று கேட்டார்.
''ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,''. ''நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,'' என்றார் பக்தர்.
ராமகிருஷ்ணர் அவரிடம்''நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
''டாக்டர்'' என்றார் வந்தவர்.
''அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,''என்றார் ராமகிருஷ்ணர்.
''எப்படி முடியும்? படித்தால் தான் முடியும்,'' என்றார் வந்தவர்.
''படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் 'பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள்,'' என்றார் ராமகிருஷ்ணர்.