ADDED : ஜன 06, 2013 04:20 PM

இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்...அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்...தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா...தகவல் ஏதுமில்லையே என்று! அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், 'ஸ்ரீராம ஜெயம்' என்று ஆர்ப்பரித்தார். ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால் தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார். பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார். 'ரா' என்றால் 'அக்னி பீஜம்'. 'பீஜம்' என்றால் 'மந்திரம்'. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது. 'மா' என்றால் 'அமிர்த பீஜம்'. அது மனதில் அன்பை நிறைக்கிறது. அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.
'ராம' என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் 'ராம'வுடன் 'ஜெயம்' (வெற்றி) சேர்க்கப்பட்டது. அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? அவர் 33 கோடி தடவை 'ராம' நாமம் சொல்லியிருக்கிறார்.
அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார்.
ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும். 'ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும்.