ADDED : ஜூன் 29, 2012 10:22 AM
நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள்,''பிறரைக் கீழே வீழ்த்தி விடுபவன் வலிமை வாய்ந்தவனல்லன். கோபம் வரும்போது, தன்னை அடக்கிக்கொள்பவனே வலிமை வாய்ந்தவனாவான்,'' என்கிறார்கள். இதில் இருந்து கோபத்தைவிடவேண்டும் என்பது தெளிவாகிறது.
கோபம் எண்ணற்ற தீமைகளுக்கு ஆணிவேராக உள்ளது. இதனால் மனிதன் அறிவையும் உணர்வையும் இழந்து விடுகிறான். தனது நாவிலிருந்து என்ன வெளிப்படுகிறது, தான் மேற்கொண்டிருக்கும் செயலின் விளைவு என்னவாகும் என்பதைக் கூட அவன் சிந்திப்பதில்லை. மணவிலக்கு, கொலை, தற்கொலை, குடும்பச்சண்டை, நாட்டின் அவலநிலை ஆகிய அனைத்தும் கோபத்தால் விளைபவையே. சில சமயங்களில், மனிதன் கோபத்தின் காரணமாக தனது இம்மை, மறுமை ஆகிய இரண்டின் நற் பலன்களையும் பாழ்படுத்திக் கொள்கிறான்.
ஒருவர் தனக்கு நல்லுரை வழங்குமாறு ரஸூல் (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே' என்றார்கள். அவர் மீண்டும் நல்லுரை வழங்குமாறு வேண்டிக்கொண்டே இருந்தார். ரஸூல்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவையும் 'கோபம் கொள்ளாதே' என்ற பதிலைத்தான் திரும்பத்திரும்பக் கூறினார்கள்.
கோபம் கொள்ளாமல் இருப்பதற்கான மனத்தத்துவ வழிமுறைகள், குர்ஆனில் அநேக ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன. ''ஷைத்தானின் தூண்டுதலினால் கோபம் வருகிறது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். நெருப்பைத் தண்ணீரால் அணைத்து விடமுடியும். எனவே, உங்களில் எவருக்கேனும் கோபம் வந்துவிட்டால் ஒலு செய்து கொள்ளவும்'' என்கிறது ஒரு ஹதீஸ்.
''உங்களில் ஒருவருக்கு கோபம் வந்து விடுமாயின், அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும். கோபம் அடங்கிவிட்டால் நல்லது. இல்லாவிடில் படுத்துக்கொள்ளவும்,'' என்றும்,''ஓர் அடியான் அல்லாஹ்வின் திருப்தியை நாடி விழுங்கிவிடும் கோபமானது, அல்லாஹ்விடத்து குடிக்கப்படும் மொடக்குகளிலே மிகச்சிறந்ததாகும்'' என்றும் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
கோபத்தைக் குறைக்க இனியேனும் முயற்சிப்பீர்களா!
