தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/கிருஷ்ணன் உண்மையில் நீலநிறமா?

கிருஷ்ணன் உண்மையில் நீலநிறமா?

கிருஷ்ணன் உண்மையில் நீலநிறமா?


PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீல வண்ணத்திற்கும் பகவான் கிருஷ்ணருக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறும் சத்குரு, கிருஷ்ணரின் நீலநிற மாயாஜாலத்தையும், கிருஷ்ணரின் விரோதிகள் கூட அதனால் ஈர்க்கப்பட்டது பற்றியும் விளக்குகிறார்.

கடவுள்கள் நீலநிறத்தில் சித்தரிக்கப்படக் காரணம்


சத்குரு: நீலம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை. இந்த இருப்பில், நீங்கள் பார்க்கலாம், பரந்து விரிந்த மற்றும் நம் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனைத்துமே நீலநிறமாகும், அது கடலாகவோ ஆகாயமாகவோ இருந்தாலும் சரி. நம் புலன் உணர்வை விட பெரிதான ஒன்று பொதுவாக நீலமாக இருக்கும், ஏனென்றால் நீலம்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கியதின் அடிப்படை ஆகும்.

இதன் அடிப்படையிலேயே இந்தியாவின் பல கடவுள்கள் நீலநிற தோல் உடையவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். சிவன் நீலநிற தோலுடையவர். கிருஷ்ணர் நீலநிற தோலுடையவர். ராமர் நீலநிற தோலுடையவர். அவர்களின் தோல் நீலநிறமாக இருந்தது என்பதல்ல. அவர்கள் நீலநிற கடவுளர்களாக குறிக்கப்பட்டனர், ஏனென்றால் அவர்களைச் சுற்றி ஒரு நீல ஒளிவட்டம் இருந்தது.

ஒளிவட்டம் என்றால் என்ன?


ஒளிவட்டம் என்றால் ஒவ்வொரு பொருளையும் சுற்றியிருக்கும் ஒரு சக்தி வளையம். இருப்பு முழுவதும் ஆற்றல் என்பது அறிவியல் உண்மையாகும். ஆற்றலின் ஒரு பகுதி தன்னை ஸ்தூல வடிவமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆற்றலின் மற்றொரு பகுதியானது தன்னை ஸ்தூல வடிவத்தில் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் ஒரு வடிவெடுத்துள்ளது. எந்த வடிவம் ஸ்தூலமாகவில்லையோ அல்லது ஸ்தூலமாக மறுக்கிறது ஆனாலும் ஒரு வடிவெடுத்துள்ளதோ அதனை ஆரா என்கிறோம்.

கிருஷ்ணர் நீலவதனன் என்பது, அவரின் தோல் நீலநிறமாக இருந்தது என்பதல்ல. அவர் கருப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அவரின் சக்தி நீலநிறம் ஆனதை விழிப்புணர்வுள்ளவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால் அவரை நீலநிறமாக வர்ணித்தனர். கிருஷ்ணர் யார் என்பது பற்றியும் அவர் என்ன என்பது பற்றியும் பல சர்ச்சைகள் உண்டு. ஆனால் அவருடைய அனைத்தையும் ஒன்றாக உணரும் திறனை ஒருவராலும் மறுக்க முடியாது. அதனால் அவரின் நீலநிறம் பொதுவாகி நின்றது மற்றும் எல்லா மூலை முடுக்குகளிலும் நம் தேசத்தில் கண்ணனை நீலமாக பார்த்தனர்.

கவர்ந்து ஈர்க்கின்ற நீலம்


அவரது சக்தி அல்லது ஆராவின் வெளிவளையம் நீலம். ஆதலால் அவர் கவர்ந்திழுக்கின்ற தன்மையுடையவராய் இருந்தார் - அவரின் மூக்கின் வடிவத்தாலோ அல்லது கண்ணாலோ அல்லது வேறு எதுவாலோ அல்ல. எத்தனையோ பேர் நல்ல மூக்குடனும் நல்ல கண்களுடனும் நல்ல உடம்புடனும் இருக்கின்றனர், ஆனால் இந்த அளவு வசீகரிக்கும் தன்மையுடன் இல்லை. ஒருவரின் ஆராவில் உள்ள நீலநிறமே அவரை கவர்ந்திழுக்கும் வசீகரமானவராக ஆக்குகிறது.

பகைவரையும் ஈர்த்த நீலம்

இந்த நீலம், அவரின் அனைத்தையும் உள்ளடக்கும் திறன் அவ்வாறாக இருந்தது. தன் பகைவரையும் அவர் முன் உட்கார வைத்தது, அவருக்கு விட்டுக்கொடுக்க வைத்தது. அவரால் பலமுறை தன்னை திட்டியவர்களையும் தனக்கு எதிராக சதிசெய்து கொலை செய்ய முயற்சி செய்தவர்களையும் எளிதாக மாற்ற முடிந்தது. அவருக்கு பல தன்மைகள் உள்ளன, ஆனால் இந்த நீலம் அவருக்கு அவர் செய்வதிலெல்லாம் எப்போதும் துணையாக இருந்தது. அவர் குழந்தையாக இருந்தபோது அவரை கொல்ல வந்த கொலைகாரியான பூதனா கூட அவரின் வசீகரத்தால் அவர்மேல் காதலானாள். அவள் அவருடன் சில நிமிடங்களே இருந்தாள், ஆனால் அவரது நீல மாயாஜாலத்தில் முழுமையாக சிக்கிக்கொண்டாள்.

ஆராவின் வெவ்வேறு நிறங்கள்


இதில் வேறொரு அம்சமும் உள்ளது. ஒருவரின் பரிணாம வளர்ச்சியில் அவரின் ஆரா பல நிறங்கள் ஆகலாம். நம் சாதனைகளில் நாம் ஆக்ஞாவை முக்கியமாக கொண்டால் அப்போது காவிநிறமே பிரதானமாகும். அந்த நிறமே அனைத்தையும் துறப்பதற்கும், துறவறத்துக்கும், கிரியாவுக்கும் உரியது. ஒருவரது ஆரா வெண்ணிறமாக இருந்தால் அவர் மிகவும் தூய்மையானவராக இருப்பார். அத்தகையவரின் இருப்பு பிரமாதமாக இருக்கும், ஆனால் அவர் செயல் சார்ந்தவராக இருக்கமாட்டார். ஒருவர் தன் உச்சபட்ச நிலையை அடைந்தபின் இந்த உலகில் செயல் செய்ய முயன்றால் அவரின் ஆரா அடர் நீலமாக இருக்கும். அதிக செயலாற்றியவர்கள் அனைவருமே நீலம். இந்த வகையான ஒளியே உங்களை பேராற்றல் பெற்றவர் என்று மற்றவர்கள் நினைக்கும் வகையில் உலகில் செயல்பட அனுமதிக்கிறது.

எனவே கிருஷ்ணரைச் சுற்றி நீலநிற பெயிண்ட் பூசுவதற்கு பதிலாக, மக்கள் அவரை நீலநிறமுள்ளவர் என்று சொன்னார்கள், ஏனென்றால் விழிப்புணர்வுள்ளவர்கள் அவரைப் பார்க்கும்போது, அவர் நீலமாகத் தெரிந்தார், அதுதான் முக்கியம். தெரியாதவர்கள் அவரைப் பார்த்தபோது, அவர்கள் அவரது தோலைப் பார்த்தார்கள், ஆனால் அது முக்கியமல்ல. அவரது வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைவிட அவரது வாழ்க்கையைப் பற்றிய உண்மை நமக்கு முக்கியமானது, ஏனென்றால் செய்திகள் நம் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் உண்மை நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us