தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது?

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு முக்கியமானது?


PUBLISHED ON : பிப் 24, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2022 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எவ்வளவு பங்காற்றுகிறது? தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களுக்குத்தான் “அதிர்ஷ்டம்” பங்காற்றுகிறது என்பதை சத்குரு எடுத்துரைக்கிறார்.

சத்குரு: அதிர்ஷ்டத்தைச் சார்ந்து இருப்பவர்கள் எப்போதும் நட்சத்திரங்கள், கோள்கள், இடங்கள், அதிர்ஷ்ட காலணிகள், அதிர்ஷ்ட உடைகள், அதிர்ஷ்ட எண்கள் போன்ற எல்லாவிதமானவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வழிகளில் அதிர்ஷ்டத்தைத் தேடுவதிலும், வாழ்வின் நடப்புகளை நிகழ்த்துவதற்குக் காத்துக்கிடப்பதிலும், அவர்களாகவே எளிதாக உருவாக்கியிருக்கக்கூடிய விஷயங்கள் முற்றிலும் கைநழுவிப் போகின்றன. வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நிகழச் செய்வது நீங்களாக தான் இருக்கவேண்டும். உங்களுடைய அமைதிக்கும், குழப்பத்துக்கும் உங்கள் செயல்பாடுதான் காரணம். உங்களது தெளிவான தன்மையும், தெளிவில்லாத தன்மையும் உங்களால் ஏற்படுகிறது. உங்களது ஆனந்தமும், அலைக்கழிப்பும் உங்களால் உருவாகிறது. உங்களுக்குள் இருக்கும் பிசாசுக்கும், இறைவனுக்கும் நீங்கள்தான் காரணம்.

உங்களுடைய சக்தி நிலைகள் அவற்றின் முழுத்திறனுக்குத் தாமாகவே வெளிப்படுவதை அனுமதிப்பதற்குப் பதில், சரியான சூழ்நிலை நிகழக்கூடிய விதத்தில் நம்மைச் சுற்றித் தேவையான உள்சூழல் மற்றும் வெளிச்சூழலை உருவாக்குவதற்குப் பதில், நமக்காக நிகழ்த்தி வைப்பதற்காக வேறு எதனையோ நாம் துரதிருஷ்டவசமாக எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

காலை முதல் மாலை வரை, நிச்சயமாக உங்களுடைய இந்த நாளை, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? என்பது முழுவதும் உங்களுடையது. உங்களைச் சுற்றியுள்ள மக்களுடன் உங்களுக்கு எவ்வளவு உரசல் இருந்தது என்பது, சூழ்நிலைகளையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் - அவர்களுக்குள் இருக்கும் வரையறைகள் மற்றும் சாத்தியங்கள் - புரிந்துகொள்வதில் எவ்வளவு தூரம் உணர்வில்லாமல் இருந்துள்ளீர்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் என்ன அதிர்ஷ்டக்கல் அணிந்திருந்தபோதும், அதனால் அது முடிவு செய்யப்படுவதில்லை. நீங்கள் எவ்வளவு உணர்வுடன், புத்திசாலித்தனத்துடன் மற்றும் எவ்வளவு விழிப்புணர்வுடன், உங்களைச் சுற்றியுள்ள உயிர்களைப் பார்க்கிறீர்கள் என்பதையே அது சார்ந்துள்ளது.

ஒரு நாள், விமான நிலையத்தில் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டனர். ஒருவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். ஆகவே மற்றொருவர், “ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

முதலாமவர் கூறினார், “நான் என்னவென்று உங்களிடம் கூறுவது? எனது முதல் மனைவி புற்று நோயால் இறந்துவிட்டார். எனது இரண்டாவது மனைவி என் பக்கத்து வீட்டுக்காரருடன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். என்னைக் கொல்வதற்கு முயற்சி செய்த காரணத்தால் என் மகன் சிறையில் இருக்கிறான். எனது 14 வயது மகள் கர்ப்பமாக இருக்கிறாள். என் வீட்டை மின்னல் தாக்கிவிட்டது. என்னுடைய பங்குகள் அனைத்தும் இன்றைக்கு பங்கு வர்த்தகத்தில் கீழே சென்றுவிட்டன. இது போதாதென்று எனக்கு எயிட்ஸ் இருப்பதாக எனது மருத்துவ அறிக்கை கூறுகிறது.”

“அடடா! என்ன ஒரு துரதிருஷ்டம்! அதுசரி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தொழில்?” என்று கேட்டார் இரண்டாமவர்.

முதலாமவர், “நான் அதிர்ஷ்டக் கற்கள் விற்கிறேன்.”

அது என்னவென்றால், நீங்கள் ஒரு விதமாக இருந்தால், சில விஷயங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். நீங்கள் வேறொரு விதமாக இருந்தால், வேறு சில விஷயங்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். பூக்கள் நிறைந்த ஒரு புதர் மற்றும் வறண்ட, முட்கள் நிறைந்த புதர் இருந்தால், எல்லா தேனீக்களும் பூத்துக் குலுங்கும் புதரை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. பூத்திருக்கும் புதர் அதிர்ஷ்டசாலியல்ல, அது தன்னிடம் இனிய மணத்தைக் கொண்டிருக்கிறது - அதுதான் எல்லாவற்றையும் அதனிடம் ஈர்க்கிறது. முட்புதர் வேறொரு விதமான சூழ்நிலையை உருவாக்குகின்ற காரணத்தால், மக்கள் அதனிடமிருந்து விலகி நடக்கின்றனர். இரண்டுமே தாங்கள் உருவாக்கும் தன்மை பற்றி விழிப்புணர்வுடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவைகள் எந்த விதமாக நிகழத் தேவைப்படுகிறதோ அந்த விதமாக நிகழ்கின்றன.

ஆகவே, உங்களுக்கு மகத்தான விஷயங்கள் நிகழ்கின்றன, ஆனால் அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியவில்லையென்றால், நீங்கள் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுகிறீர்கள் என்கிறேன் நான். ஆனால் இருந்தாலும், உங்களுக்கு வாழ்க்கை நல்லவிதமாக நிகழ்வதோடு, அதன் காரணம் உங்களுக்குத் தெரியும் என்றால், அதன் பொருள் நீங்கள் இன்று உங்களுடைய உணவை விழிப்புணர்வுடன் சமைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே மோசமான விஷயங்கள் நடக்கும் நிலையில், அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் அழுகிவிட்ட உணவை மறுபடியும் சாப்பிடுகிறீர்கள்.

அதிர்ஷ்டம் - உங்களால் பார்க்கமுடியாதபோது

“திருஷ்டி” என்றால் “பார்ப்பது”, “அத்ரிஷ்ட்” என்றால் “பாராதிருத்தல்”. உங்களது பார்க்கும் சக்தியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். உங்களால் பார்க்க முடிந்தால், ஏதோ ஒன்று ஏன் நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உங்களால் பார்க்கமுடியாதபோது, விஷயங்கள் அதன்போக்கில் அல்லது தற்செயலாக நிகழ்வதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். அதனை அதிர்ஷ்டம் என்றோ அல்லது துரதிருஷ்டம் என்றோ நினைக்கிறீர்கள்.

ஆன்மீகத் தன்மையுடன் இருப்பதன் பொருள், நீங்கள் உங்கள் வாழ்க்கையை 100% உங்கள் கைகளில் எடுத்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை 100% உங்கள் கைகளில் நீங்கள் எடுத்தால்தான், நீங்கள் 100% விழிப்பான உயிராகிறீர்கள் என்பதுடன் தெய்வீகத்திற்கான சாத்தியம் உங்கள் வாழ்வில் எழுகிறது.

உங்கள் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் உருவாக்குவதற்கான நேரம் இது. அதிர்ஷ்டம், நட்சத்திரங்கள், கிரகங்களைச் சார்ந்திருக்காதீர்கள். இவைகள் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்களின் தலைவிதியை மனித இயல்பு முடிவு செய்யவேண்டுமா அல்லது ஜடப்பொருள்கள் மனித இயல்பை முடிவு செய்யவேண்டுமா? எந்த விதமாக இருக்கவேண்டும்? ஜடப்பொருள்களுக்கு என்ன நிகழவேண்டும் என்பதை மனித இயல்பு முடிவு செய்யவேண்டும். ஆனால் ஒரு நட்சத்திரம் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்தால், அப்போது ஜடப்பொருள்கள் உங்களது தலைவிதியை முடிவு செய்கின்றன.

அப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனெனில் அதற்குள் ஒருமுறை நீங்கள் சென்றுவிட்டால், ஒரு விதமான பழக்கப்பட்ட பாதைக்குள் நீங்கள் செல்ல நேர்வதுடன், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகிவிடும். அதைக் கடந்து உங்களால் செல்லமுடியாது. உங்களது வளர்ச்சியையும், சாத்தியங்களையும் அது குறைத்துவிடும்.

தற்செயலாக ஒரு சில விஷயங்கள் நிகழ்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்காக நீங்கள் காத்திருந்தால், நீங்கள் உங்களுடைய கல்லறையில் இருக்கும்போதுதான் நல்ல விஷயங்கள் உங்களுக்கு நிகழலாம். ஏனென்றால், அதற்கு அவ்வளவு காலம் தேவைப்படலாம்.

நீங்கள் தற்செயலாக வாழும்போது, பயத்திலும், பதற்றத்திலும் நீங்கள் வாழ்கிறீர்கள். ஒரு நோக்கம் மற்றும் திறனுடன் நீங்கள் வாழும்போது, என்ன நிகழுகிறது அல்லது நிகழவில்லை என்பது ஒரு பொருட்டல்ல; உங்களுக்கு என்ன நிகழுகிறது என்பதாவது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுவே மிகுந்த சமநிலையான வாழ்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us