தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/எது பாவம்? எது புண்ணியம்?

எது பாவம்? எது புண்ணியம்?

எது பாவம்? எது புண்ணியம்?


PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நீ செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சே தீருவ!'- இப்படி நம்மைப் பார்த்து யாரேனும் சொல்லிவிட்டால், அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க, உடனே கடவுளிடம் மனு தாக்கல் செய்து பாவ விமோச்சனம் கேட்போம். உண்மையில் பாவங்களுக்கு தண்டனை கிடைக்குமா? கடவுளிடம் பிரார்த்தனை செய்வது பலனளிக்குமா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்.

கேள்வி: துன்பங்கள் வரும்போது, மனிதன் கடவுளிடம் கூடுதலாகப் பிரார்த்தனை செய்வது அவசியமா? அதனால் பலனுண்டா?


சத்குரு: எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்.

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?

பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும். துன்பங்கள் வரும்போது சாய்ந்துகொள்ளும் தோளாக கடவுளைக் கூப்பிட்டால் மட்டும் என்ன? உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை.

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளை தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்!

கேள்வி: பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்?


சத்குரு: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.

நிபந்தனையற்ற அன்பைக்கொண்டு உங்களை வசப்படுத்த அவர்கள் முனைவதில்லை. மாறாக அச்சத்தையும் குற்ற உணர்வையும் உங்கள்மீது அவர்கள் விட்டெறிகிறார்கள். உங்கள் மனதில் அச்சமும் குற்ற உணர்வும் ஓங்குகையில் நீங்கள் புத்திசாலித்தனத்தை இழக்கிறீர்கள். மனிதத்தன்மையை இழக்கிறீர்கள். அதைப் பயன்படுத்தி அவர்கள் உங்களை அடக்கி ஆள முனைகிறார்கள்.

அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், சமூகம், பெற்றோர் எல்லோருமே இதே தந்திரத்தைக் கையாள்கிறார்கள்.

எல்லையில்லாத் தன்மையை உணரும் வாய்ப்பு கொண்ட உங்களை இந்தச் சங்கிலிகளால் அவர்கள் கட்டிப்போடுகிறார்கள். படைத்தவன்மீது நம்பிக்கையற்றவர்களும், மனிதநேயம் மறந்தவர்களும் மட்டுமே பாவம் புண்ணியம் பற்றிப் பேசுவார்கள்.

கேள்வி: மூளைக்கும் மனதுக்கும் என்ன வித்தியாசம்?


சத்குரு: மூளை உடலின் ஒரு பாகம். எலும்பு, தசை நரம்பு போன்ற மற்ற பாகங்களைப் போல் மூளையும் செல்களால் ஆனதுதான். ஆனால் எலும்பிலும், நரம்பிலும், தசையிலும் இருக்கும் செல்களின் உணர்ந்துகொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளன. மூளையில் இருக்கும் செல்களோ மிக நுட்பமானவை.

தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், மூளையுடன் உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரானிக் சாதனங்களை ஒப்பிடலாம். அவை நாளுக்கு நாள் எப்படி சிறிதாகிக் கொண்டே வருகின்றன? கைக்குள் அடங்கும் கம்ப்யூட்டர்கள் வந்துவிட்டன. நாளைக்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு சிப் கண்டுபிடிக்கப்படலாம். அதைக் காற்றில் வீசிவிட்டால், அது இயங்கும் அளவுக்கு விஞ்ஞானம் நுட்பமாகிவருகிறது.

அதேபோல்தான் மூளையில் இருக்கும் செல்கள் சாதாரணமாய் கவனித்துவிடக் கூடியவை அல்ல. மிகமிக நுட்பமானவை.

மூளையைப் பயன்படுத்தாமல், மனம் இயங்க முடியாது. மூளை என்பதை மனது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வாகனம் என்று சொல்லலாம்.

எப்படி உங்கள் உயிர் பிரிந்த பின், உடல் இந்த உலகில் இயங்க முடியாதோ, அதேபோல், மூளை தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும்போது, உங்கள் மனம் தன் வெளிப்படையான இயக்கத்தை நிறுத்திவிடுகிறது. ஆனால் உடலைப் பிரிந்த பின்னும் உயிர் எப்படி நுட்பமாக இயங்குமோ, அதேபோல் உங்கள் மனமும் மூளையைப் பிரிந்த பின்னும் தொடர்ந்து நுட்பமாக இயங்கும். தனக்கேற்ற அடுத்த உடலைத் தேடிக்கொள்ளும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us