PUBLISHED ON : செப் 21, 2011 12:00 AM

எடியூரப்பா...
அப்பப்பா...!
கர்நாடக பா.ஜ.,வில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும், கட்சியின் மேலிட தலைவரான அனந்த குமாருக்கும் ஆகவே ஆகாது. எந்த விஷயமாக இருந்தாலும், இருவரும், முரண்பட்ட கருத்துக்களைத் தான் தெரிவிப்பர். தன்னிடம் இருந்து முதல்வர் பதவி பறிபோவதற்கு, அனந்த குமார் தான் காரணம் என, உறுதியாக நம்புகிறார் எடியூரப்பா. 'மேலிட தலைவர்களிடம், என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக போட்டுக் கொடுத்து, முதல்வர் பதவியை அனந்த குமார் பறித்து விட்டார்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி, புலம்பி வருகிறார். எடியூரப்பாவின் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான ஒரு சம்பவம், சமீபத்தில் அரங்கேறியுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, விரைவில் நாடு தழுவிய ரத யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த யாத்திரையின் ஒருங்கிணைப்பாளராக, அனந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளது தான், எடியூரப்பாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனந்த குமாருக்கும், கட்சி மேலிடத்துக்கும் இடையில் உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில், எடியூரப்பாவின் பரிவாரங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.'அரசியல் தரகர் நிரா ராடியா விவகாரத்தில், அனந்தகுமாருக்கு தொடர்பு இருக்கிறது. வீட்டு வசதித் துறையிலும், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதையெல்லாம், அத்வானியின் காதுக்கு கொண்டு போக வேண்டும்' என, திரைப்படங்களில் வரும் வில்லன்கள் போல், சதித் திட்டம் தீட்டி வருகின்றனர், எடியூரப்பா வகையறாக்கள்.

