PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

'மழை விட்டாலும், துாறல் ஓயாது போலிருக்கிறது...' என கவலையுடன் கூறுகின்றனர், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகிகள்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், அக்கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா முதல்வராக இருந்தார்.
அவரிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்குள், சிவகுமாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. ஆனாலும், சிவகுமாரால் நிம்மதியாக முதல்வர் பதவியில் இருக்க முடியவில்லை.
நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ராமலிங்க ரெட்டி, தனக்கு வேறு துறை வழங்கக் கோரி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டினார். நீண்ட போராட்டத்துக்கு பின், அவரை ஒருவழியாக சிவகுமார் சமாதானப்படுத்தினார்.
இப்போது, அடுத்த பிரச்னை ஆரம்பமாகி விட்டது... அரசு கொறடாவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் பட்டன், 'நான் கட்சிக்காக நீண்ட காலம் உழைத்துள்ளேன்; அமைச்சர் பதவி தரும்படி யாரிடமும் போய் கேட்க மாட்டேன்; பதவியை விட சுயமரியாதையே முக்கியம்.
'நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக, எதிரிகள் வதந்தி பரப்புகின்றனர். என் கடைசி மூச்சு இருக்கும் வரை அரசியலில் இருப்பேன்...' என, விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் சிவகுமாரோ, 'எத்தனை பேருக்குத்தான் அமைச்சர் பதவி தர முடியும்; முதல்வர் பதவி, முள் படுக்கையாக இருக்கும் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.
