PUBLISHED ON : செப் 13, 2026 01:27 AM

'கட்சியில் மறைமுகமாக இருக்கும் கோஷ்டி பூசலை, இவர் துாண்டி விடுகிறாரே...' என, மத்திய பிரதேச மாநில முன்னாள் பெண் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான இமர்த்தி தேவி குறித்து கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரசில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது.
ம.பி., முதல்வர் பதவியை தான் சிந்தியா எதிர்பார்த்தார். ஆனால், அவரை மத்திய அமைச்சராக்கி டில்லிக்கு அனுப்பி விட்டனர். சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான இமர்த்தி தேவியை, முதல்வர் மோகன் யாதவ் ஓரங்கட்டி வைத்துள்ளார்.
வாரிய தலைவர் அல்லது கட்சியில் ஏதாவது முக்கிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த இமர்த்தி தேவிக்கு, இதுவரை எந்த பதவியும் கிடைக்கவில்லை.
இதனால், மோகன் யாதவ் மீது அதிருப்தியில் இருந்து வரும் இமர்த்தி தேவி, தற்போது அதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்...
சமீபத்தில், ம.பி., மாநில பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாநில அமைச்சர் கிருஷ்ண கவுரை பார்த்து, 'நீங்கள் கண்டிப்பாக ம.பி., முதல்வராகி விடுவீர்கள்; கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்...' என்றார் இமர்த்தி தேவி. இதை கேட்டு, கிருஷ்ண கவுர் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
'முதல்வர் மோகன் யாதவுக்கு எதிராக கிருஷ்ண கவுரை கொம்பு சீவி விடுகிறாரே; இது, கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லையே...' என, பா.ஜ.,வினர் புலம்புகின்றனர்.
