PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:19 AM

'மஹாராஷ்டிராவில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டது...' என, 'பொடி' வைத்து பேசுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள், சமீபகாலமாக தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை என, பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், சரத் பவார் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரசின் மற்றொரு பிரிவுடன் கை கோர்க்க தயாராகி வருகிறது, பா.ஜ., மேலிடம். இதற்கான காய் நகர்த்தல்கள் துவங்கியுள்ளன.
இந்த நிலையில் தான், சரத் பவாரின் மகளும், லோக்சபா எம்.பி.,யுமான சுப்ரியா சுலேவின் மகள் ரேவதிக்கும், மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வின் முன்னணி தலைவருமான அருண் லக்கானியின் மகன் சாரங்கிற்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
திருமணத்தன்று, இரு கட்சிகளின் மூத்த தலைவர்களிடையே கூட்டணி பேச்சை துவங்குவதற்கான ஏற்பாடுகளும் திரைமறைவில் வேகமாக நடந்து வருகின்றன. இதனால், இந்த திருமணம் மஹாராஷ்டிரா அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
'ஒரு திருமண நிகழ்ச்சி, மஹாராஷ்டிராவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆச்சரியமான விஷயம் தான்...' என்கின்றனர், அங்குள்ள மக்கள்.
