PUBLISHED ON : ஆக 22, 2026 02:59 AM

'இவர் அரசியல்வாதியா, ஆன்மிகவாதியா, நடிகரா; எப்படி இவரை அடையாளப்படுத்துவது...?' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பற்றி குழப்பத்துடன் பேசுகின்றனர், அம்மாநில மக்கள்.
தொடர்ந்து, கோமாளித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தேஜ் பிரதாப்பை கட்சியை விட்டே நீக்கினார் லாலு. இதையடுத்து, ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கிய தேஜ் பிரதாப், கடந்தாண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்தார்.
தேஜ் பிரதாப், சற்று வித்தியாசமான குணம் உடையவர். சில நேரங்களில், தன்னை முழுநேர அரசியல்வாதியாக காட்டிக் கொள்வார். திடீரென ஆன்மிகவாதியாக மாறி, கிருஷ்ண பக்தர் என கூறி, புல்லாங்குழலுடன் சுற்றுவார். 'நீட்' தேர்வு முறைகேடுக்கு எதிராக போராடுவதாக கூறி, சமீபத்தில் சிறைக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஹிந்தி நடிகை மல்லிகா ஷெராவத்துடன், தான் தோன்றும் சில காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட தேஜ் பிரதாப், 'எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்...' என, அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த பீஹார் மக்கள், 'தேஜ் பிரதாப் அடுத்து நடிகர் அவதாரம் எடுக்க போகிறாரோ...?' என ஆச்சரியத்துடன் பேசுகின்றனர்.
