PUBLISHED ON : பிப் 04, 2025 12:00 AM

'சினிமாவைப் போல அரசியலையும் அதிரடியாகத் தான் கையாள்கிறார்...' என, ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பவன் கல்யாண், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக விளங்கியவர்.
இவருக்கு தெலுங்கு சினிமா ரசிகர்கள், 'பவர் ஸ்டார்' என்ற செல்லப் பெயர் வைத்து அழைத்தனர். அதிரடியான சண்டை காட்சிகள் உள்ள படங்களில் தான் அதிகம் நடிப்பார்.
தற்போது அரசியலுக்கு வந்த பின்னும், அதிரடியை பின்பற்றுகிறார். சில மாதங்களுக்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விஷயத்தில் தடாலடியாக இறங்கி அரசியல் செய்தார், பவன் கல்யாண். 'லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்களை ஏழுமலையான் மன்னிக்க மாட்டார்...' என கூறியதுடன், அதற்காக விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வேண்டி, பிரார்த்தனை செய்தார்.
சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அவருக்கு தகவல் வந்தது. தன் ஆதரவாளர்களுடன் துறைமுகத்துக்கு சென்று, போதைப் பொருள் இருந்த கன்டெய்னரை மடக்கிப் பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
இதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இதை பார்த்த ஆந்திர மக்கள், 'சினிமா பாதிப்பில் இருந்து இன்னும் பவன் கல்யாண் வெளியில் வரவில்லை...' என, கிண்டல் அடிக்கின்றனர்.