PUBLISHED ON : ஜூன் 01, 2026 01:04 AM

'பதவியில் இருந்தால் தான் மரியாதை...' என புலம்புகிறார், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது, பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி முதல்வராக உள்ளார்.
கடந்த பிப்ரவரியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. திரிணமுல் காங்கிரஸ் சார்பில், மம்தா பானர்ஜியே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அப்போது, இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில், அப்போது மம்தா முதல்வர் பதவியில் இருந்தார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ., அரசு பதவியேற்றதும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறி, அந்த கட்சி சார்பில் கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் மம்தாவே ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து, 'மம்தா சட்டம் படித்துள்ளாரா; வக்கீல் சங்கத்தில் பதிவு செய்துள்ளாரா என விளக்கம் அளிக்க வேண்டும்' என, 'பார் கவுன்சில்' எனப்படும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மேற்கு வங்க பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதைக் கேள்விப்பட்ட மம்தா, 'முதல்வர் பதவியில் இருந்தபோது யாரும் எதுவும் கேட்கவில்லை. இப்போது பதவியில் இல்லை என்பதால் கேள்வி எழுப்புகின்றனர்; இது எந்த ஊர் நியாயம்...?' என கொந்தளிக்கிறார்.
